மும்பை, இந்தியா: என்னங்க போற போக்குல முடிச்சி விட்டீங்க..? என ஊர் பக்கம் சொல்லிக் கேட்டிருப்போம். இன்று அந்த சொல் ரிலையன்ஸ் Jio GigaFiber-க்கு கச்சிதமாகப் பொருந்தும்.
இந்தியாவில் இன்னும் டெலிகாம் துறையில், குறிப்பாக பிராட்பேண்ட் துறையில் ஏர்டெல், டாடா, ஏசிடி, நெக்ஸ்ட்ரா, எம்டிஎன்எல், போன்ற நிறுவனங்கள் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது Jio GigaFiber-ன் திட்டங்கள் இவர்கள் அனைவரையும் வீட்டைப் பார்த்து மூட்டை கட்ட வைக்கும் அளவுக்கு இறங்கி அடிக்கப் போகிறது என்பது தான் செய்தி.
அறிவிப்பு
கடந்த ஆகஸ்ட் 12, 2019 அன்று தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டு பொதுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தான் வரும் செப்டம்பர் 05, 2019 அன்று முதல் Jio GigaFiber-ன் அதிவேக பிராட்பேண்ட் இணையத் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனச் சொல்லி இருந்தார் முகேஷ் அம்பானி. அதோடு இந்தியாவின் இணைய வேகத்தில் Jio GigaFiber ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வரும் எனவும் சொல்லி இருந்தார். அந்த ஒற்றை வரியிலேயே மேலே சொன்ன பல நிறுவனங்களுக்கு சப்த நாடி அடங்கி விட்டது.
விலை
அதற்கு அடுத்து Jio GigaFiber திட்டத்தின் கீழ், 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட இணைய சேவைகள் மாதம் 700 ரூபாய் முதல் தொடங்கும் எனச் சொல்லி இருந்தார். அதோடு இணைய வேகம் சுமார் 1 ஜிபிபிஎஸ் (1000 எம்பிபிஎஸ்) வரை போகலாம் எனவும் சொல்லி போட்டியாளர்களை பீதி அடையச் செய்தார். இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக Jio GigaFiber திட்டங்களின் விலை உலக இணைய சேவை விலையில் சுமார் 10-ல் ஒரு பங்காக இருக்கும் எனவும் சொல்லி வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்திருக்கிறார்.
விலை நிலவரம்
1. டாடா நிறுவனத்தின் பிராட்பேண்ட் இணைய சேவைகளை எடுத்துக் கொண்டால் 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட 300 ஜிபி இணையத்துக்கு 1,299 ரூபாய் வசூலிக்கிறார்கள்.
2. ஏர்டெல் எண்டர்டெயின்மெண்ட் திட்டத்தை எடுத்துக் கொண்டால் அதே 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட 300 ஜிபி இணையத்துக்கு 1,099 ரூபாய் வசூலிக்கிறார்கள். ஏர்டெல்லின் 300 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட 600 ஜிபி இணையத்துக்கு 1,599 ரூபாய் வசூலிக்கிறார்கள்.
Jio GigaFiber
மற்ற இணைய சேவை நிறுவனங்களும் ஏறத்தாழ இதே அளவு தொகையைத் தான் வசூலிக்கிறார்கள். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் Jio GigaFiber திட்டமோ இதை எல்லாம் விட சுமார் 30% விலை குறைவாக, 700 ரூபாயில் இருந்து திட்டங்களை அறிவிக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு ஒரு ஆண்டு கால Jio GigaFiber திட்டத்தைத் தேர்வு செய்பவர்களுக்கு HD அல்லது 4K LED டிவி மற்றும் 4K செட் டாப் பாக்ஸ் கொடுக்கப்படும் என்று வேறு சொல்லி அடுத்த டெலிகாம் புரட்சிக்கு அடி போட்டிருக்கிறார்.
முன் பதிவு
இந்த மக்கள் இலவச திட்டத்துக்கு முன்னாள் டாடாவோ ஏர்டெல்லோ தாக்கு பிடித்து நிற்க முடியுமா..? என்று கேட்டால் பதில் சொல்ல ஆள் இல்லை. ஏற்கனவே ஜியோ விஷயத்தில் தன் சேவை தரத்தை நிரூபித்த ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது தன் Jio GigaFiber திட்டத்தை எளிதில் மக்களிடம் கொண்டு சென்று சேர்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக 1,600 இந்திய நகரங்களில் சுமார் 1.5 கோடி மக்களும் Jio GigaFiber திட்டத்துக்கு முன் கூட்டியே பதிவும் செய்து வைத்திருக்கிறார்கள். ஆக மேலே சொன்னது போல டாடா மற்றும் ஏர்டெல்லை போகிற போக்கில் ரிலையன்ஸ் ஜியோ முடித்துவிடும் போலத் தான் இருக்கிறது.