கொஞ்சம் ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. இந்தியர்கள் பயன்படுத்தும் மொத்த மொபைல் ஃபோன்களில் 95 சதவிகித மொபைல் ஃபோன்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவைகளாம்.
கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் இரண்டு மொபைல் ஃபோன் உற்பத்தி ஆலைகள் தான் இருந்ததாம். ஆனால் தற்போது 268 மொபைல் ஃபோன் உற்பத்தி ஆலைகள் இந்தியா முழுமைக்கும் இருக்கிறதாம்.
இதற்கு எல்லாம் காரணம் மத்திய அரசு கொண்டு வந்த மேக் இந்தியா திட்டம் தான் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அதிக மொபைல்ஃபோன்
இன்றைய நிலவரப் படி, உலகிலேயே அதிக மொபைல் ஃபோன்களை உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் என்றால் நம்புவீர்களா..? நம்பித் தான் ஆக வேண்டும் என்கிறார் இந்திய செல்லூலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சங்கத்தின் தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரோ (Pankarj Mohindroo). நம் இந்தியர்களுக்கு தயாரித்தது போக தற்போது மற்ற உலக நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப் போவதாகச் சொல்கிறார்.
ஏற்றுமதி
இந்திய செல்லூலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சங்கத்தின் தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரோ (Pankarj Mohindroo)-வின் கணக்குப் படி, இந்தியர்களுக்குத் தேவையான மொபைல் போன் உற்பத்தியை நாம் செய்து விட்டோம். அதற்கு மேல் இந்தியாவில், இந்தியர்களுக்காக உற்பத்தி செய்ய ஒன்றும் இல்லை. எனவே தற்போது இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்போன்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்து இருக்கிறார்களாம். வரும் 2025-ம் ஆண்டுக்குள் ஒரு கணிசமான எண்ணிக்கையில் செல்ஃபோன்களை ஏற்றுமதி செய்யப் போகிறார்களாம்.
உற்பத்தி
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது இந்தியாவில் சுமார் 60 மில்லியன் செல்ஃபோன்கள் தான் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததாம். ஆனால் கடந்த 2017 - 18 ஆண்டு காலத்தில் சுமாராக 225 மில்லியன் செல்ஃபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறதாம். எலெக்ட்ரானிக்ஸ் துறைக்கான தேசிய கொள்கையில் மத்திய அரசு, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை இந்தியாவில் தயாரிப்பது மற்றும் எலெக்ட்ரானிக்ஸில் இருக்கும் அனைத்து மதிப்பு கூட்டல் வேலைகளையும் செய்து ஏற்றுமதி செய்வதை வலியுறுத்துகிறதாம்.
இலக்கு
ஆக வரும் 2025-ம் ஆண்டுக்குள், 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 100 கோடி செல்ஃபோன்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டுமாம். இதில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 60 கோடி செல்ஃபோன்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயித்து இருக்கிறார்களாம். இந்தியாவில் தற்போது 45 கோடி செல்ஃபோன் பயன்பாட்டாளர்கள் தான் இருக்கிறார்கள். வரும் 2022-க்குள் இந்த எண்ணிக்கை 85.9 கோடியாக அதிகரிக்கும் என சில வணிக சங்கங்கள் கணித்திருக்கின்றன.
6.7 லட்சம் பேர்
அதோடு India Cellular and Electronics Association (ICEA)-ன் சர்வே அறிக்கைகள் படி இந்தியாவில் 268 செல்ஃபோன் மற்றும் செல்ஃபோன் உதிரிப் பாக தயாரிப்பு ஆலைகள் இருக்கிறதாம். இந்த உற்பத்தி ஆலைகள் வழியாக சுமார் 6.7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருவதாகவும் சொல்லி இருக்கிறார்கள். ஆக தற்போது இந்தியர்கள் கையில் வைத்துப் பேசிக் கொண்டிருக்கும் மொபைல் ஃபோன்களில் பெரும்பாலானவை இந்திய தயாரிப்புகள் தான் எனச் சொல்கிறார்கள்.
அரசு திட்டங்கள்
மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் வழியாக இந்தியாவில் உற்பத்தியை பெருக்கச் செய்தது, Modified Special Incentive Package Scheme (M-SIPS) திட்டம் வழியாக கம்பெனிகளின் முதல் (Capital) தொகையில் 20 - 25 சதவிகித அளவுக்கு மானியம் கொடுத்தது, Electronics Manufacturing Clusters (EMC) திட்டம் வழியாக மாநில அரசுகளையும் நல்ல உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுக்க வைத்தது என செய்திகள் அடுக்கப்படுகின்றன.
உத்திரப் பிரதேசம்
தற்போது மொபைல்ஃபோன் உற்பத்தியில் எந்த மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது என்று கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்..! நம் யோகி ஆதித்ய நாத் முதல்வராக இருக்கும் உத்திரப் பிரதேசம் தான் தற்போது இந்தியாவின் மொபைல்ஃபோன் உற்பத்திக் கேந்திரமாம். கடந்த 2018 ஜூலையில் தான் சாம்சங் நிறுவனம் உலகிலேயே மிகப் பெரிய மொபைல் உற்பத்தி ஆலையை உத்திரப் பிரதேசத்தின் நொய்டா பகுதியில் தொடங்கினார்கள் என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
சாம்சங்
உலகின் மிகப் பெரிய மொபைல்ஃபோன் உற்பத்தி ஆலையின் துணை உடன், தன் மொபைல்ஃபோன்களின் உற்பத்தியை ஆண்டுக்கு 68 மில்லியன் எண்ணிக்கையில் இருந்து 120 மில்லியனாக அதிகரிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்களாம். சாம்சங்கின் இந்த உற்பத்தி ஆலை விரிவாக்கப் பணிகள் பல்வேறு கட்டங்களாக வரும் 2020-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று சொல்லி இருக்கிறார்கள். சாம்சங்கைத் தொடர்ந்து சியாமி, ஓப்போ, விவோ, ஆப்பிள் என பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவில் தான் தங்கள் செல்ஃபோன்களை உற்பத்தி அல்லது அஸெம்பில் செய்து வருகிறார்களாம்.