ஒரு நொடிக்கு 80,000 ரூபாய் சம்பாதித்தால் நீங்களும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கலாம். அப்படி முடியவில்லையா ஒரு நிமிடத்துக்கு சுமாராக 50 லட்சம் ரூபாய் சம்பாதியுங்கள்.
அதுவும் முடியவில்லையா..? ஒரு மணி நேரத்துக்கு சுமாராக 28 கோடி ரூபாய் சம்பாதியுங்கள். இல்லங்க ரொம்ப கஷ்டம் என்கிறீர்களா, நாள் ஒன்றுக்கு சுமார் 675 கோடி ரூபாயாவது சம்பாதிக்க வேண்டும்.
அப்போது தான் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிக்க முடியும். இப்படித் தான் உலகின் டாப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒவ்வொரு நொடிக்கும் கூடிக் கொண்டிருக்கிறதாம்.
வரலாறு காணாத உச்சம்
1929-ம் ஆண்டு தொடங்கி இன்றைய தேதி வரை கணக்கில் எடுத்தால் அமெரிக்காவின் 0.1 சதவிகித டாப் பணக்காரர்கள் மிக அதிக அளவு சொத்துக்களை நிர்வகித்து வருகிறார்களாம். இன்றைய நிலவரப் படி உலக அளவில் உலகின் டாப் 25 பணக்காரர்கள் மட்டும் சுமாராக 1.4 ட்ரில்லியன் டாலர் (98 லட்சம் கோடி ரூபாய்) மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கிறார்களாம். கடந்த ஆண்டைக் காட்டிலும் 24 சதவிகிதம் கூடுதல் சொத்து மதிப்பை டாப் 25 பணக்காரர்கள், இந்த ஆண்டில் கூடுதலாக நிர்வகிக்கிறார்களாம்.
இப்போது வரை
நீங்கள் மேலே உள்ள மூன்று பத்திகளை படித்து முடித்திருக்கும் நேரத்தில் சுமாராக உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு 14 - 28 கோடி ரூபாய் அதிகரித்திருக்கும் என்கிறது ப்ளூம்பெர்க் நிறுவனம். இப்படித் தான் வால்மார்ட் குடும்பத்தின் சொத்து மதிப்புகள் ஒவ்வொரு நொடிக்கும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனவாம். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் வால்மார்ட் நிறுவனத்தை நடத்தும் வால்டன் குடும்பத்தின் சொத்து மதிப்பு 39 பில்லியன் டாலர் (சுமார் 2.73 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்து தற்போது 191 பில்லியன் டாலராக விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறதாம்.
மற்ற அமெரிக்கர்கள்
நம் தல தோனி வரும் Snickers விளம்பரத்தை அறிவீர்களா..? அந்த சாக்லேட்டை தயாரிக்கும் மார்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் கடந்த ஒரு வருடத்தில் சுமாராக 37 பில்லியன் டாலர் (2.59 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்திருக்கிறதாம். இதனால் மார்ஸ் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு மட்டும் 127 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறதாம். இந்த குடும்பம் ஒரு நாளுக்கு சுமாராக 710 கோடி ரூபாயும், ஒரு நிமிடத்தில் சுமாராக 50 லட்சம் ரூபாய் என்கிற கணக்கில் இவர்களின் சொத்தின் மதிப்பு அதிகரித்திருக்கிறது.
நம் அம்பானி
வழக்கம் போல உலக பணக்காரர்கள் பட்டியலில் நம் அம்பானியும் இடம் பிடித்திருக்கிறார். கடந்த ஒரு வருடத்தில் நம் அண்ணன் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 7 பில்லியன் டாலர் (49,000 கோடி ரூபாய்) அதிகரித்திருக்கிறதாம். அதாவது ஒரு நாளில் சுமாராக 130 கோடி ரூபாய் சொத்து மதிப்பு அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டில் 43 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை வைத்திருந்த முகேஷ் அம்பானி, தற்போது 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறாராம். முகேஷ் அம்பானி போல, உலகின் டாப் 25 பணக்கார குடும்பங்கள் நிர்வகிக்கும் சொத்துக்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 250 பில்லியன் டாலர் அதிகரித்திருக்கிறதாம்.
ஜியோ & ரீடெயில்
ஏற்கனவே ஒரு வருடத்தில் சுமாராக 49,000 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருக்கிறார். இதில் பற்றாக்குறைக்கு ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் என இரண்டு பெரிய நிறுவனங்களையும் முரட்டுத் தனமாக வளர்த்து எடுத்துக் கொண்டிருக்கிறார். இதில் இந்திய டெலிகாம் சந்தையை முழுமையாக வளைக்க புதிதாக ஜியோ ஜிகா ஃபைபர் வேறு கொண்டு வருகிறார்..? ஆக அடுத்து வரும் ஆண்டுகளிலும், ரிலையன்ஸ் ஜியோவின் வளர்ச்சி அசுரத் தனமாக இருக்கும், நம் அம்பானியின் சொத்து மதிப்பு இன்னும் பல பில்லியன் டாலர் அதிகரிக்கும் என நம்பலாம்.
பணக்கார சரிவு
பணக்காரர்கள் என்றாலே மேலே மேலே என்று தான் போவார்கள் போல என தவறாக எண்ண வேண்டாம். பி எம் டபிள்யூ நிறுவனத்தை நிர்வகிக்கும் குவாண்ட் (Quandt) குடும்பத்தினர்களின் சொத்து மதிப்பு பெரிதாக கடந்த ஒரு வருடத்தில் சரிந்திருக்கிறதாம். அதே போல எண்டர்பிரைஸ் பிராடெக்ட் என்கிற அமெரிக்க எண்ணெய் மற்றும் கேஸ் நிறுவனத்தை நிர்வகிக்கும் டன்கன் (Duncan) குடும்பத்தினர்கள், தசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தை நிர்வகிக்கும் தசால்ட் (Dassault)குடும்பத்தினர்கள் என பல பெரிய குடும்பங்களும் சரிவை சந்தித்திருக்கிறார்களாம்.