டெல்லி : தண்ணீர் பிரச்சினை தீர்க்க ஜல் ஜீவன் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
ஆமாங்கா.. இந்த ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கு 3.5 டிரில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
பல வருடங்களுக்கு முன் ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்று கூறியதாகவும், அவரின் வாக்கு தற்போது பலித்துள்ளதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.
அடுத்து குடிநீர் திட்டம்
பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்று பின்னர், நரேந்திர மோடி அரசு அனைவருக்கும் சுத்தமான குடி தண்ணீர் என்ற திட்டத்தை கையில் எடுத்து உள்ளது. இதற்காக ஜல் ஜீவன்' மிஷன் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பட்ஜெட்டிலேயே பேசப்பட்டாலும், இது குறித்து முழுமையாக எதுவும் கூறப்படவில்லை. இந்த நிலையில் இன்று சுதந்திர தின விழாவில் உரையாற்றிய மோடி இது குறித்து விரிவாகக் பேசியுள்ளார்.
நீர் இல்லாமல் இவ்வுலகம் இல்லை.
இந்த நிலையில் கடந்த ஜூலை 5ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது முதல் பட்ஜெட்டில் ஜல் ஜீவன் மிஷன் அமைச்சரவை ஒப்புதலுக்கு தயாராக உள்ளது எனவும் கூறியிருந்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று 73வது சுதந்திர தின உரையில், நீர் வள ஆதாரங்களை பாதுகாப்பதற்காக, நதிகள், குளங்களை தூர் வாரவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், திருவள்ளுவர் என்ற மகான் தான் தண்ணீர் பிரச்சினையைப் பற்றி யாரும் சிந்திக்காத காலத்திலேயே, தண்ணீரை பற்றி சிந்தித்து 'நீரின்றி அமையாது உலகு' என்றும், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளார் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
ஜல் ஜூவன் திட்டத்திற்கு ரூ.3.5 டிரில்லியன்
நீர் பிரச்சினையை தீர்க்க ஜல் ஜீவன் மிஷன் என்ற புதிய திட்டத்தை அறிவிக்கிறேன். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கு போதிய நிதியும் ஒதுக்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர ஜல் ஜீவன் மிஷனுக்கு, ரூ .3.5 டிரில்லியன் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பல அரசுகள் கவனம் செலுத்தின
இந்தியாவில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனைக்காக, இதற்கு முன்பு இருந்த பல அரசுகள் கவனம் செலுத்தி வந்தன. ஆனாலும் இன்று வரை தண்ணீர் பிரச்சனை என்பது தீர்ந்த பாடாக இல்லை. இந்த நிலையில் பல அரசுகள் தங்களது சொந்த வழிகளில் கூட கவனம் செலுத்தினாலும் இந்த பிரச்சனை தீர்ந்த பாடாக இல்லை. அதோடு இன்றளவிலும் இந்தியாவில் பாதி வீடுகளில் குடிநீர் குழாய்கள் இல்லை என்பதே உண்மை என்றும் கூறியுள்ளார்.
குடி நீருக்காக கஷ்டப்பட வேண்டியிருக்கிறது?
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவது முன்னுரிமையாக உள்ளது என்றும், அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கொண்டு குடிநீரைப் பெறுவதற்கு, மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2024க்குள் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் குழாய்
2024-க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீரை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும், தற்போது இந்தியாவின் கிராமப்புறங்களில் 18 சதவிகிதம் குடும்பங்களுக்கு மட்டும், குழாய் மூலம் நீர் வழங்கபட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில், இதனை ஐந்து மடங்காக உயர்த்துவதே, இந்த அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
தண்ணீர் பராமரிப்புக்கு மக்களும் உதவி புரிய வேண்டும்
தண்ணீர் பாரமரிப்பு என்பது ஒரு மாநிலத்தின் கையில் உள்ளது. மத்திய அரசுக்கு ஜல் ஜீவன் திட்டத்தை சாதிப்பது எளிதான பணியாக இருக்காது. மாநில நிர்வாகங்களுக்கு இது ஒரு சவாலாக அமையும். நீர் ஆதாரம் ஒரு மாநிலத்தின் சொந்த விஷயமாக இருப்பதால், அதை செயல்படுத்த மாநிலங்கள் தான் செயல்பட வேண்டும். அதோடு நீருக்காக அரசு மட்டும் செயல்பட்டால் போதாது. ஒவ்வொரு குடிமக்களும் தண்ணீரை தூய்மையாக வைத்திருக்க உதவும் போது தான், இந்த திட்டத்தினை செயல்படுத்த முடியும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
மக்கள் தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்
தற்போது தண்ணீர் பிரச்சனை இந்தியாவுக்கு பெரும் பிரச்சனையாக முன் வைத்துள்ளாதால், இந்த விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே 600 மில்லியன் மக்கள் தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில் டெல்லி, பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட 21 நகரங்கள் 2020 ஆம் ஆண்டில் நிலத்தடி நீரின்றி போகும், இதுவே 100 கோடி மக்களை பாதிக்கும். இந்த நிலையில் 2030 ஆம் ஆண்டில் நாட்டின் நீர் தேவை இரட்டிப்பாகும் என்பதால், இந்த பிரச்சனை இன்னும் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது, இது 2050 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
பருவ மழையால் நீர் இருப்பு குறைவு
கடுமையான நீர் நெருக்கடியை கண்டுள்ள 256 மாவட்டங்களில், 1,592 தொகுதிகளை அரசாங்கம் கண்டுள்ளது என்றும், மேலும் இவை ஏற்கனவே நிலத்தடி நீரை சுரண்டுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் தென் மேற்கு பருவமழையின் மெதுவான முன்னேற்றத்தினால், நீர் நிலைகளில் கணிசமான அளவுக்கு நீரின் அளவு குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.