பெங்களூரு, இந்தியா: கடந்த மே 2018 கால கட்டத்தில் தான் வால்மார்ட் நிறுவனம் சுமார் 16 பில்லியன் டாலர் கொட்டிக் கொடுத்து Flipkart நிறுவனத்தை வாங்கியது.
உலகிலேயே இவ்வளவு பணம் கொடுத்து முடிக்கப்பட்ட இ காமர்ஸ் டீல் என அத்தனை பேரும் வியந்து பேசினார்கள். Flipkart நிறுவனத்தை அன்னாந்து பார்த்தார்கள்.
Flipkart நிறுவனத்தில் 77 சதவிகித பங்குகளை வாங்கி, அதன் ப்ரொமோட்டராகவே ஆகிவிட்டது வால்மார்ட். அப்படி என்றால் இந்தியாவில் பட்டையை கிளப்பி இருக்க வேண்டும் இல்லையா..?
ட்விஸ்ட்
அங்கு தான் கதையில் ஒரு பெரிய ட்விஸ்டே நடந்திருக்கிறது. Flipkart நிறுவனத்தை வாங்கிய பிறகு, வால்மார்ட் இண்டர்நேஷனல் யூனிட், ஜூலை 2019 காலாண்டில், செயல்பாட்டு லாபம் சுமார் 30 சதவிகிதம் சரிந்து 900 மில்லியன் டாலராக இருக்கிறதாம். கடந்த ஜூலை 2018-ல் வால்மார்ட் இண்டர்நேஷனல் யூனிட்டின் செயல்பாட்டு லாபம் 1.3 பில்லியன் டாலராக இருந்ததாம். நட்டத்தைச் கணக்கிட்டால் சுமார் 385 மில்லியன் டாலர் (சுமார் 2,695 கோடி ரூபாய்) நட்டம் கண்டிருக்கிறதாம்.
காரணம்
இந்த பலத்த நட்டத்துக்கு Flipkart நிறுவனம் தான் காரணம் எனக் கை காட்டுகிறார்கள் வால்மார்ட் நிறுவன அதிகாரிகள். வால்மார்ட் நிறுவனத்தின் நிகர விற்பனை சர்வதேச சந்தைகளில் சுமார் 1.1 சதவிகிதம் சரிந்திருக்கிறதாம். இதே ஜூலை 2019 காலாண்டும் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 1.1% குறைந்து 29.1 பில்லியன் டாலராக சுருங்கிஇருக்கிறதாம். ஜூலை 2018 காலாண்டில் இது 29.5 பில்லியன் டாலராக இருந்ததாம்.
இரண்டாவது முறை
Flipkart நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, வால்மார்ட் நிறுவனத்தின் நிதி நிலை மோசமடைவது, தொடர்ச்சியாக இது இரண்டாவது காலாண்டாம். 2019 - 20 முதல் காலாண்டில் (ஏப்ரல் 2019) வால்மார்ட் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் சுமார் 38 சதவிகிதம் சரிந்து வெறும் 790 மில்லியன் டாலராக சுருங்கிவிட்டதாம்.
முதல் ஆண்டு
Flipkart நிறுவனத்தை வால்மார்ட் விலை கொடுத்து வாங்கிய பின், வால்மார்ட் நிறுவனத்தின் முழு நிதி ஆண்டு நிதி நிலை அறிக்கைகளில் Flipkart நிறுவனத்தையும் சேர்ப்பது இதுவே முதல் முறையாம். கடந்த மே மாதத்தில் Flipkart நிறுவனத்தை வாங்கும் போதே ஒரு பங்குக்கு சுமார் 0.60 டாலர் நட்டம் சந்திப்போம் என கணித்திருந்தது வால்மார்ட்.
12,600 கோடி
ஒரு பங்குக்கு 0.60 டாலர் என்பதை கணக்கிட்டுப் பார்த்தால், ஒரு நிதி ஆண்டில் சுமாராக மொத்தம் 1.8 பில்லியன் டாலர் நட்டத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும். இதை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 12,600 கோடி ரூபாய் நட்டம் சந்திக்க வேண்டி இருக்கும். வால்மார்ட் நிறுவனத்துக்கு இந்தியா தவிர கனடா, சீனா, இங்கிலாந்து போன்ற பெரிய சில்லறை வணிகச் சந்தைகளும் கையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிகர விற்பனை சரிவு
உலகின் மிகப் பெரிய சில்லறை வியாபாரியான வால்மார்ட் தன்னுடைய நிகர சர்வதேச விற்பனை வளர்ச்சி, 5 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்து இருந்தது. இப்போது வாங்கிய இந்த பலத்த அடிக்குப் பின் தன் எதிர்கால வளர்ச்சிக் கணிப்பை 3 - 4 சதவிகிதமாக குறைத்துக் கொண்டிருக்கிறது. நிகர விற்பனை சரியும் போதும், தங்களின் செயல்பாட்டு லாபம் அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறது வால்மார்ட்.
வால்மார்ட் தரப்பு
ஜூலை 2019 உடன் முடியும் காலாண்டில், வால்மார்ட் நிறுவனத்தின் தோராய லாபம் சுமார் 1.6 சதவிகிதம் சரிந்திருக்கிறதாம். வால்மார்ட் நிறுவனத்தின் நிதி நிலை குறித்து "எங்களுக்கு இந்தியாவில் கிடைத்திருக்கும் வாய்ப்புக்காக மகிழ்ச்சி அடைகிறோம். அதே நேரத்தில் எங்கள் பல சந்தைகள் மேக்ரோ பொருளாதாரப் பிரச்னைகள் மற்றும் அரசியல் சவால்களைச் சந்தித்து வருகிறோம். எங்கள் நிறுவனம் வழக்கம் போல ஒரு புதிய வழியைக் கண்டு பிடித்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் அனுபவத்தை எளிதாக்கும்" எனச் சொல்லி இருக்கிறார் வால்மார்ட்டின் தலைவர் டோக் மேக்மிலன் (Doug McMillon).
நல்ல இகோ சிஸ்டம்
மேலும் "Flipkart நிறுவனத்தின் இகோ சிஸ்டம் சிறப்பாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த வியாபாரத்தில், Flipkart-ன் துணை நிறுவனமான மிந்த்ரா-வின் நெட்வொர்க்கில் இருக்கும் மளிகைக் கடைகளைப் பயன்படுத்தி சுமார் 85 லட்சம் டெலிவரிகளில் 70 சதவிகித டெலிவரிகளைச் செய்திருக்கிறார்கள். இதே போல Flipkart-ன் போன்பே (Phone Pe) நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50 மில்லியனைக் கடந்திருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறார் டோக் மேக்மிலன்.
வருத்தப்படுவார்கள்
வால்மார்ட் நிறுவனம் கணித்திருப்பது போல, Flipkart நட்டக் கணக்கு காட்டத் தொடங்கி இருக்கிறது. இந்த நட்டக் கணக்கிலேயே தொட்டு மீண்டும் எழுந்து வந்து வியாபாரம் செய்துவிட்டால் பரவாயில்லை. தப்பித்தது வால்மார்ட். ஒருவேளை இந்த நட்டக் கணக்கு தொடர்ந்தால் ஏன்டா Flipkart-ஐ வாங்கினோம் என தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு வால்மார்ட் கண்ணீர் விடத் தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.