வாசிங்டன், அமெரிக்கா: அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான சர்ச்சைகள் மற்றும் பேச்சு வார்த்தைகள் இன்று மற்றும் ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
அமெரிக்காவுக்கு சாதகமான விஷயங்களோ அல்லது அமெரிக்கா சொல்லும் விஷயங்களையோ பாகிஸ்தான் செய்யாததால் 440 மில்லியன் டாலர் நிதியை குறைத்திருக்கிறது அமெரிக்கா.
இதை இந்திய மதிப்பில் கணக்கிட்டுப் பார்த்தால், சுமார் 3,080 கோடி ரூபாய் வருகிறது.
ஒப்பந்தம்
பாகிஸ்தான் நாட்டுக்கு அமெரிக்கா Pakistan Enhanced Partnership Agreement (PEPA) 2010 என்கிற ஒப்பந்தத்தின் கீழ் தான் நிதி கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இந்த Pakistan Enhanced Partnership Agreement (PEPA) 2010 ஒப்பந்தப்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7.5 பில்லியன் டாலர் வரை கொடுக்க அக்டோபர் 2009-ல் ஒப்புக் கொண்டது. அதன் பிறகு சில பல காரணங்களால் அமெரிக்கா, பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய மொத்த நிதி அளவை 4.5 பில்லியன் டாலராக குறைத்துக் கொண்டது.
ராணுவ தரப்பு
இப்போது மீண்டும் 440 மில்லியன் டாலர் குறைத்திருப்பதால், Pakistan Enhanced Partnership Agreement (PEPA) 2010 ஒப்பந்தப்படி அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய மொத்த நிதி அளவு 4.1 பில்லியன் டாலராக சரிந்து இருக்கிறதாம். கடந்த ஆண்டு அமெரிக்க அரசு, பாகிஸ்தானுக்குத் தர வேண்டிய 300 மில்லியன் டாலர் நிதியை, அமெரிக்க ராணுவம் தடுத்து நிறுத்தியது. அதற்கு காரணமாக பாகிஸ்தான் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவில்லை என விளக்கமும் சொன்னது அமெரிக்க ராணுவத் தரப்பு.
தீவிரவாதம்
கடந்த ஜனவரி 2018-ல் தான் பெண்டகன் சுமார் 1 பில்லியன் டாலர் நிதியை குறைத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதற்கு ஹக்கானி தீவிரவாத கும்பலை கட்டுப்படுத்தாததைக் காரணமாகச் சொன்னார்கள். சமீபத்தில் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்தித்துக் கொண்ட போது, பாகிஸ்தானின் நடவடிக்கைகள் மற்றும் செய்கைகளால் தான் 1.3 பில்லியன் டாலர் நிதி ரத்து செய்யப்பட்டது என கடுமையாக விமர்சித்தார் ட்ரம்ப்.
ட்ரம்ப் தரப்பு
"அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு கடந்த பல ஆண்டுகளாக சுமார் 1.3 பில்லியன் டாலர் நிதியைக் கொடுத்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் அமெரிக்காவுக்காக எதையும் செய்வதில்லை. மாறாக பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு சிக்கல்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ஆகையால் தான் 1.3 பில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைத்தேன்" என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமே, சந்திப்பின் போது நேரடியாகச்ச் சொல்லி இருக்கிறார் ட்ரம்ப்.


Click it and Unblock the Notifications