டெல்லி : கடந்த சில மாதங்களாகவே ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் விற்பனை சரிவால், பல லட்சம் பேர் ஏற்கனவே தங்களது வேலையை இழந்துள்ளதாக கூறியிருந்தோம்.
இந்த பிரச்சனை இதோடாவது முடியுமா என்றால் இல்லை என்பதற்கான பல காரணிகள் உள்ளன.
அதிலும் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டிலேயே, இந்த வீழ்ச்சியால் பல லட்சம் பேர் தங்களது வேலையினை இழந்துள்ளனர். இதில் இன்னும் இந்த வீழ்ச்சி தொடரும் பட்சத்தில் என்னவாகுமோ என்ற பதற்றமான நிலையிலேயே தொடர்ச்சியான பல அறிக்கைகள், ஆட்டோமொபைல் துறைக்கு பாதகாமாகவே வந்து கொண்டு இருக்கின்றன.
வீழ்ச்சி தொடரும்
எனினும் இந்த வீழ்ச்சி இன்னும் தொடரும் என்றும், இது நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் அல்ல, மூன்றாவது காலாண்டிலும் தொடரும் என்றும், இந்த விற்பனை வீழ்ச்சியால் மூன்றாவது காலாண்டில் 5 லட்சம் பேர் மேலும் தங்களது வேலையை இழக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த வேலையிழப்பில் முதலிடத்தில் இருப்பது விற்பனை பிரிவு என்றும் கூறப்படுகிறது. இதையடுத்தாற்போல் உள்ள டெக்னிக்கல் பிரிவு, பெயிண்டிங், வெல்டிங், கேஸ்டிங், உற்பத்தி, டெக்னாலஜி மற்றும் சேவை துறையிலும் பலர் வேலை இழக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
10 லட்சம் பேர் வேலை பறி போகலாம்
ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி குறைந்துள்ளதையடுத்து, கடந்த சில மாதங்களில் ஆட்டோமொபைல் துறை சார்ந்த துறைகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த துறையில் நிலவும் இதே போக்கு அடுத்த 4 - 5 மாதங்களுக்கு நீடித்தால், 10 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோகலாம் என்றும் Automotive ComponentsManufacturers Association of India (ACMA) தலைவர் வின்னி மேக்தா கூறியுள்ளார்.
ஒவ்வொரு நிறுவனத்திலும் 10% பணி நீக்கம் இருக்கலாம்
வேலைக்கு ஆள் சேர்க்கும் நிறுவனங்களான Xpheno and TeamLease நிறுவனங்கள் அடுத்து வரும் காலாண்டில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் குறையலாம் என்றும், அதிலும் டீம்லீஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ரிதுபர்ண சக்கரவர்த்தி இது குறித்து கூறுகையில், இது அடுத்து வரும் காலாண்டில் இந்த விற்பனை சரிவு நீடிக்கலாம் என்றும், இதனால் இந்த வேலையிழப்பு ஒவ்வொரு நிறுவனத்திலும் 10 சதவிகிதம் அளவுக்கு நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒப்பந்த பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம்
400 கோடி ரூபாய்க்கும் குறைவான வருவாய் கொண்ட டயர் 2 மற்றும் டயர் 3 நிறுவனங்கள் அதிகளவிலான சரிவில் காணப்படுகின்றன. இத்துறையில் மட்டும் 5 மில்லியன் பேர் வேலை செய்கின்றனர். இது 15 பில்லியன் டாலர் அளவில் ஏற்றுமதி செய்கின்றது. இந்த நிலையில் இந்த துறையில் திறமையில்லாத பணியாளர்கள், அறைகுறையாக தெரிந்துள்ள பணியாளர்கள், இது தவிர ஒப்பந்த பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றும் மேக்தா கூறியுள்ளார்.
அடுத்து வரும் மாதங்களிலும் பணி நேரம் குறைக்கப்படலாம்
கடந்த ஆண்டு திருவிழா காலங்களிலேயே இந்த மந்த நிலை தொடங்கியது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2018 முதல், வேலை நாட்கள், பணி நீக்கம், பணி நேரம் குறைப்பு உள்ளிட்டவற்றால் 15 சதவிகிதம் பணி நேரம் குறைந்துள்ளது என்றும் ACMAன் தலைவர் ராம் வெங்கடரமனி கூறியுள்ளார். மேலும் இது அடுத்து வரும் மாதங்களிலும் தொடரலாம் என்றும் கூறப்படுகிறது.
15% பணி நீக்கம் தொடரலாம்
இதே Amalgamations Group நிறுவனத்தின் தலைவர் இது குறித்து கூறுகையில், அடுத்து வரும் காலாண்டுகளில், இந்த விகிதம் இன்னும் 15 சதவிகிதம் பணி நீக்கம், அதாவது இன்னும் 7,50,000 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் Amalgamations Group நிறுவனம், தங்களது நிறுவனத்தில் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.
புதிய பணியமர்த்துதல் முடக்கம்
மேற்கண்ட நிறுவனங்கள் மட்டும் அல்லாது, மேலும் பல ஆட்டோமொபைல் சார்ந்த நிறுவனங்கள் தற்போது பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளன. உதாரணமாக ஆட்டோமொபைல் நிறுவனமான Minda Industries Ltd புதிய பணியமர்த்தலை முடக்கம் செய்துள்ளதாம். இது சரக்கு மற்றும் செலவினங்களை குறைக்க உதவியுள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் நாங்கள் இதுவரை நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் எண்ணிக்கையில் எதுவும் மாற்றம் செய்யவில்லை. தற்போதைக்கு எங்களது நிறுவனத்தில் 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றனர். அவர்களில் 5000 பேர் ஒப்பந்த ஊழியர்கள். தேவைப்பட்டால் அவர்களை பணி நீக்கமும் செய்வோம் என்றும் இந்த நிறுவனத்தின் தலைவர் நிர்மல் மிண்டா கூறியுள்ளார்.
தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம்
இதுவே டயர் உற்பத்தியாளரான Continental India நிறுவனம், நாங்கள் உற்பத்தியை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதோடு பணியமர்த்துதல் என்பது செயல்முறை ஒழுக்கத்தின் ஒரு பகுதியாக காணப்படுகிறது. எனினும் நாங்கள் தொடர்ந்து பணியமர்த்திக் கொண்டு தான் இருக்கிறோம் என்றும் இந்த நிறுவனத்தின் ஹெச்.ஆர். அஜய் குமார் கூறியுள்ளார்.