டெல்லி: இந்தியப் பொருளாதார மந்தநிலை மிகவும் கவலை அளிக்கிறது. மின்சாரம் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் நிலவும் பிரச்னைகளை மத்திய அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். அதோடு பல புதிய பொருளாதார சீர் திருத்தங்களைக் கொண்டு வந்து தனியார் முதலீடுகளைக் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் முன்னாள் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன்.
அதோடு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அளவைகளில் முக்கியமான ஒன்றான ஜிடிபியைக் கணக்கிடும் வழிமுறைகளையும் கவனிக்கச் சொல்லி இருக்கிறார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து, ஏகப்பட்ட தனியார் அனலிஸ்டுகள் பல்வேறு வளர்ச்சிக் கணிப்புகளைச் சொல்கிறார்கள். தனியார் அனலிஸ்டுகள் சொல்லும் வளர்ச்சிக் கணிப்புகள் பெரும்பாலும், அரசு சொல்லும் கணிப்பை விட குறைவாகத் தான் இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டி இருக்கிறார் ரகுராம் ராஜன்.
இந்தியப் பொருளாதாரம் கடந்த 2014 - 15 நிதி ஆண்டு காலத்தில் இருந்து 2018 - 19 நிதி ஆண்டு வரை எடுத்துக் கொண்டால், 2018 - 19 நிதி ஆண்டில் கண்ட 6.8 சதவிகித வளர்ச்சி தான் குறைவானதாகப் பதிவாகி இருக்கிறது. இந்த நடப்பு நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்து இருக்கிறது இந்திய அரசு அமைப்புகள். ஆனால் மற்ற தனியார் துறை அனலிஸ்டுகளின் கணிப்போ பெரும்பாலும் 7 சதவிகிதத்துக்கு கீழ் தான் இருக்கிறதாம்.
ஏற்கனவே இந்திய ஆட்டோமொபைல் துறை, ஆட்டோமொபைல் உதிரி பாகத் துறை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டு மீள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் ஆயிரக் கணக்கானவர்கள் தங்கள் வேலையை இழந்து இருக்கிறார்கள். இந்திய ரியல் எஸ்டேட் துறையில் கட்டி முடித்த வீடுகள் பெரிய அளவில் விற்க்கப்படாமல் தேங்கி நிற்கிறது. எஃப் எம் சி ஜி நிறுவனங்களின் விற்பனை வால்யூம்கள் சரிந்திருக்கிறது.
வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் கதறுவதைக் கேட்க முடிகிறது. தங்கள் சந்தையை ஊக்கப்படுத்தக் கூடிய விஷயங்கள் ஏதாவது வேண்டும் என உரக்கச் சொல்வதைக் கேட்க முடிகிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள பல புதிய சீர்திருத்தங்கள் வேண்டும். அப்போது தான் இந்தியப் பொருளாதாரம் மேம்பட்டு, வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார் ரகுராம் ராஜன்.