சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & ஃபைனான்ஸ் நிறுவனம் வாகனக் கடன்களைக் கொடுக்கும் நிறுவனம். இவர்கள் இப்போது புதிதாக ஒரு வீட்டுக் கடன் கொடுக்கும் நிறுவனத்தைத் தொடங்க இருக்கிறார்களாம்.
சோழமண்டலம் நிதி நிறுவன குழுமத்தில், ஒரு வீட்டுக் கடன் நிறுவனம் இருந்தால், அது கடன் வளர்ச்சியை விரைவில் அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார் அந்நிறுவனத்தின் இயக்குநர் அருண் அழகப்பன்.
புதிதாக சோழமண்டலம் நிதி நிறுவனம் தொடங்க இருக்கும் வீட்டுக் கடன் நிறுவனம் மலிவு விலை வீடுகளை வாங்கும் நபர்களை, இலக்காக வைத்து வியாபாரம் செய்யப் போகிறார்களாம். அதாவது கடன் கொடுக்கப் போகிறார்களாம். அதிகபட்சமாக ஒரு வாடிக்கையாளருக்கு வீட்டுக் கடனாக சுமார் 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப் போகிறார்களாம்.
வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஏழை எளிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் வீடு கட்டிக் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறது. அரசு திட்டங்கள் படி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கும் திட்டங்களால் மலிவு விலை வீடுகளுக்கான கடன் அதிகரித்தது. மக்களும் வீடுகளை வாங்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
நாங்கள் இந்த வீட்டுக் கடன் துறையில் பெரிய வாய்ப்புகளைப் பார்க்கிறோம். எங்களால் யாருக்கு எல்லாம் கடன் கொடுக்க முடியுமோ அவர்களுக்கு எல்லாம் கடன் கொடுக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அருண் அழகப்பன்.
வரும் 2022-ம் ஆண்டுக்குள் இந்திய நகர் புறங்களில் சுமாராக 10 மில்லியன் வீடுகளை கட்ட இந்தியா திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 13, 2019 வரை மட்டும் சுமாராக 2.64 மில்லியன் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றன. இதை மத்திய வீடுகள் மற்றும் நகர்புற விவகாரத் துறையே சொல்லி இருக்கிறது. இன்னும் பாக்கி வீடுகள் கட்டப்பட வேண்டி இருக்கிறது.
சோழமண்டலம் நிதி நிறுவனம் வைத்திருக்கும் 2,600 கோடி ரூபாய் வீட்டுக் கடன் கொடுப்பதற்காக வைத்திருக்கும் பணத்தை, புதிய வீட்டுக் கடன் நிறுவனத்துக்கு முறையாக அனுமதிகள் எல்லாம் கிடைத்த பின் பரிமாற்றம் செய்து தங்கள் வியாபாரத்தைத் தொடங்கப் போகிறார்களாம்.