பெங்களூரு: தலைப்பை படித்த உடன் என்ன இது, நாள் முழுக்க வேலை பார்த்தால் கூட சம்பளம் கொடுக்க மாட்டார்களா..? என ஒரு சின்ன கோபம் வந்து இருக்கலாம். ஆனால் செய்தி அது அல்ல. ரோபாட் உணவகங்களைப் பற்றியது. ஆம் இங்கு ரோபாட்கள் தான் உணவு பரிமாறுகின்றன. நாள் முழுக்க சிரித்த மேனிக்கு ஓடி ஆடி, உணவு பரிமாறினாலும், இந்த ரோபாட்களுக்கு சம்பளம் கிடையாது.
இந்த ரோபாட் உணவகங்கள் நம் சென்னை ஓ எம் ஆர் பகுதியில் கடந்த பிப்ரவரி 2019 காலங்களிலேயே தொடங்கிவிட்டார்கள். அதற்கு சில மாதங்களுக்கு முன்பே குளு குளு கோவை நகரத்தில் ரோபாட் உணவகம் தொடங்கி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் நம் தமிழ் நண்பர்கள். இந்த வெற்றிகளைப் பார்த்து தான் இப்போது ஒரு ரோபாட் உணவகத்தை பெங்களூரில் தொடங்கி இருக்கிறார்கள். இது தான் பெங்களூரு நகரத்துக்குள் தொடங்கப்படும் முதல் ரோபாட் உணவகம்.
இந்த ரோபாட் உணவகம் பெங்களூரில் இந்திரா நகர் ஹை ஸ்ட்ரீட் 100 அடி சாலை பகுதியில் அமைந்திருக்கிறது. 50 பேர் உட்கார்ந்து சாப்பிட முடியும் இந்த உணவகத்தில் உணவு பரிமாற 6 ரோபாட்கள் களம் இறக்கப்பட்டிருக்கிறதாம். ஒவ்வொரு டேபிளிலும் ஒரு டேப்லெட் பொருத்தப்பட்டு இருக்குமாம். இந்த டேப்லெட் மூலம் உணவுகளை ஆர்டர் செய்யலாம். ரோபாட்களை அழைக்கலாம். உணவை ரோபாட்கள் பரிமாறும்.
ரோபாட் வெறுமனே வந்து உணவு மட்டும் பரிமாறிவிட்டுச் செல்லாது. நமக்கு பிறந்த நாள் என்றால் ஹாப்பி பர்த் டே பாடும், கல்யாண நாள் என்றால் வாழ்த்து சொல்லும், காதலர்களுக்கு குறும்பாக வாழ்த்து சொல்வது என ப்ரோகிராம் செய்திருக்கிறார்களாம். "பெங்களூரில் பல தரப்பட்ட உணவகங்கள், பல கலாச்சாரம் சார்ந்த உணவுகள் இருக்கின்றன. எனவே ரோபாட் உணவகங்களும் வரவேற்க்கப்படும் என நம்புகிறோம். பெங்களூரில் கடை திறக்க வேண்டும் என்பது கனவு, அது இன்று நினைவாகி இருக்கிறது" என்கிறார் இந்த உணவகத்தின் நிறுவனர் வெங்கடேஷ் ராஜேந்திரன்.
ரோபாட்கள் சிறப்பாக வேலை செய்யும் படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறதாம். உணவகத்தில் வேலை செய்பவர்கள் ரோபாட்டில் ஏதாவது பிரச்னை என்றால் சரி செய்வதற்கும் சில பயிற்சிகளை எடுத்துக் கொண்டார்களாம். எனவே தில்லாக ஆர்டர் செய்து சாப்பிடச் சொல்கிறார்கள். ரோபாட் அண்ணா, ஒரு வான்கோழி பிரியாணி கொண்டு வாங்க..! எக்ஸ்ட்ரா சால்னா கிடைக்குமா..?