இந்திய மண்ணில் தற்போது பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் தலைவிரித்து ஆட துவங்கியுள்ளது. ஆனானப்பட்ட முகேஷ் அம்பானியே தனது நிறுவனத்தைச் சவுதி அரேபிய நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துவிட்ட நிலையில் மற்ற நிறுவனங்களுக்கு இது என்ன பெரிய விஷயமா..?
ஈகாமர்ஸ் துறைக்கு அடுத்து இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறை ஆன்லைன் உணவு டெலிவரி துறை தான். இத்துறையில் வர்த்தக மதிப்பு குறைவாக இருந்தாலும் ஒவ்வொ மாதமும் கிட்டத்தட்ட 40 மில்லியன் டாலர் அளவிற்குச் சோமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் செலவு செய்து வர்த்தகம் செய்து வருகிறது.
இவ்வளவு பெரிய துறையைப் பன்னாட்டு நிறுவனங்கள் விட்டுவைக்குமா..? இந்தா அமேசான் வந்தாச்சு பாருங்க.
அமேசான்
சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் உணவு டெலிவரி சேவையில் அமேசான் இறங்க போவதாகவும், அதற்காக உபர் ஈட்ஸ் நிறுவனத்தை முழுமையாக வாங்கவும் முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில் வர்த்தகப் போட்டிக்காக அமேசான் இத்திட்டத்தை இன்னும் சீக்கிரமாகச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது அதிரடியாகப் பல திட்டங்களை வகுத்துள்ளது.
கமிஷன்
தற்போது சந்தையில் இருக்கும் ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் தங்களது தளத்தில் இருக்கும் ஹோட்டல்களிடம் 16 முதல் 17 சதவீதம் வரையிலான கமிஷன் தொகையைப் பெறுகிறது. இதை ஹோட்டல் உரிமையாளர்களும் சுமையாக நினைத்தாலும், ஒரு பக்கம் அதிகளவிலான் ஆர்டர்கள் குவியும் காரணத்தால் கண்டுக்காமல் இருக்கின்றனர்.
அதிரடி திட்டம்
இதைச் சரியான நேரத்தில் கவனித்த அமேசான் தனது உணவு டெலிவரி சேவை வர்த்தகத்தின் துவக்க திட்டமாக வெறும் 6-7 சதவீத கமிஷனுக்கு டெலிவரி சேவையைச் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த அதிரடி விலை குறைப்பு இந்திய உணவு டெலவரி சந்தையில் பெரும் புரட்சி வெடித்தாலும் சந்தேகம்படுவதற்கு ஆச்சரியம் இல்லை.
பிளிப்கார்ட்
ஈகாமர்ஸ் சந்தையில் அமேசான் முதல் முறையாக நுழைந்தபோது அதிரடி தள்ளுபடிகளை அறிவித்து மக்களை மட்டும் அல்லாமல் விற்பனையாளர்களையும் பெரிய அளவில் ஈர்த்தது. இதைத் தாக்குபிடிக்க முடியாமல் போட்டிக்காகப் பிளிப்கார்ட்-ம் அதிகத் தள்ளுபடியை அறிவித்து ரத்த காயம் வாங்கிக்கொண்டது. இதில் விழுந்தது தான். அதன் பின்.. ம்க்கு...
உடனடி துவக்கம்
உபர் ஈட்ஸ் நிறுவனத்துடனான டீல் இன்னும் பேச்சுவார்த்தையில் இருக்கும் நிலையில், அமேசான் இத்திட்டத்தைப் பெங்களூரில் இருந்து துவக்க முடிவு செய்துள்ளது. இதற்காகப் பிரஷ்மெனு, ரெபெல் புட்ஸ், புட்பாண்டா மற்றும் ஈட்பிட் அதோடு மெக்டொனால்டு, டாமினோஸ், கேஎப்சி மற்றும் பெங்களூரில் அதிகக் கிளைகளைக் கொண்டு ஹோட்டல்களுடன் கூட்டணி வைத்துள்ளது.
இத்திட்டம் வருகிற தீபாவளி பண்டிகையின் போது அறிவிக்க முடிவு செய்துள்ளது அமேசான்.
கூட்டணி நிறுவனம்
இத்திட்டத்தை அமேசான் ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்த வர்த்தகத்திற்குத் தேவையான நிர்வாக ஊழியர்களை அமேசான் மற்றும் கட்டமரான் வென்சர்ஸ் கூட்டணியில் உருவான பிரியோன் பிஸ்னஸ் சர்வீசஸ் தேர்வு செய்யத் துவங்கியுள்ளது.
ஆர்டர்கள் எண்ணிக்கை
தற்போதைய நிலையில் இந்தியாவில் சுமார் 500 நகரங்களில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. இதில் ஸ்விக்கி ஒரு நாளுக்கு 12 லட்ச ஆர்டர்களும், சோமேட்டோ 10 லட்ச ஆர்டர்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் அமேசான் களத்திற்கு வந்தால் இவர்களின் வர்த்தகம் எந்த அளவிற்குப் பாதிக்கும் என்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம்.