பெங்களூரு : இந்தியாவில் மிகப்பெரிய பிஸ்கட் உற்பத்தியாளரான பார்லி புராடக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நாளுக்கு நாள் நுகர்வு குறைந்து வருகிறது என்றும் இது மேலும் தொடர்ந்தால் 10,000 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
நாட்டில் ஒவ்வொரு துறையும் ஆட்டம் காண தொடங்கியுள்ள நிலையில், உணவு துறையிலும் தற்போது பிரச்சனை ஆரம்பித்துள்ளது என்றே கூறலாம்.
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் தொடர்ந்து நிலவி வரும், பொருளாதார மந்த நிலையால், ஆட்டோமொபைல் துறை முதல் சில்லறை வர்த்தகம் வரை அனைத்தும் ஆட்டம் கண்டு வருகின்றன. இந்த நிலை, உற்பத்தி மற்றும் ஆள்சேர்ப்பைக் குறைக்க நிறுவனங்களை கட்டாயப்படுத்துகிறது. ஏன் இருக்கும் ஆட்களையே குறைக்க இது வழிவகுக்கிறது.
ஒரு புறம் இப்படி ஒரு நிலை நிலவி வந்தாலும், மறுபுறம் நாட்டில் நிலவி வரும் இந்த மந்த நிலையை போக்க இந்திய அரசாங்கம், ஒரு பொருளாதார தூண்டுதலை வெளியிடும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்லே நிறுவனம், சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைக்க நாங்கள் கோரியுள்ளோம். ஆனால் அரசு இந்த ஊக்கத்தை வழங்காவிட்டால் 8,000 - 10,000 பேரை பணி நீக்கம் செய்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பார்லே நிறுவனத்தின் பார்லே- ஜி மற்றும் மேரி பிராண்டுகள் மிக பிரபலமானது. எனினும் இந்த நிறுவனம் இந்த ஒரே உணவு தயாரிப்பு நிறுவனம் மட்டும் அல்ல என்றும், எனினும் நாளுக்கு நாள் உணவுக்கான தேவை குறைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை அவசியம் தேவைப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும் பிரபல மற்றொரு பிஸ்கட் தயாரிப்பாளரான பிரிட்டானியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வருண் பெர்ரி, நுகர்வோர்கள் வெறும் 5 ரூபாய் மதிப்புள்ள பிஸ்கட்களை வாங்கவே இரு முறை யோசிக்கிறார்கள் என்றும், அந்தளவுக்கு பொருளாதாரத்தில் கடுமைமையான சில பிரச்சனைகள் உள்ளன என்றும், ஏற்கனவே கூறியிருந்தது நினைவு கூறதக்கது.
ஒரு புறம் ஆட்டோமொபைல் துறை மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள அத்துணை துறைகளுமே சங்கிலி தொடராக, ஏதேனும் ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஒட்டுமொத்த பொருளாதாரமுமே மந்த நிலையில் இருக்கும் இந்த நிலையில், அரசு இதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்க வேண்டும் என்பதே நிபுனர்களின் கருத்தாகவும் உள்ளது.