மோடி அரசு ஏற்கனவே பல துறைகள் வர்த்தகச் சரிவில் இருக்கும் நிலையில் அதை மீட்டு எடுப்பது எப்படி எனத் தெரியாமல் தவித்து வருகிறது. இதற்கிடையில் அன்னிய முதலீடு வெளியேற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, பாகிஸ்தான் எல்லை பிரச்சனை எனத் திரும்பு பக்கமெல்லாம் பிரச்சனை அணைக் கட்டியிருக்கும் வேளையில் புதிய பிரச்சனை வெடித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 28 பைசா சரிந்து சுமார் 71.71 ரூபாய்க்கு வர்த்தகமாகி சுமார் 6 மாத சரிவைப் பதிவு செய்தது.
ரூபாய் மதிப்பின் 6 மாத வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களை இந்திய சந்தையால் எதிர்கொள்ள முடியாமல் போனது தான். இந்தியச் சந்தையில் அதிகளவிலான வளர்ச்சிக்கு வாய்ப்புகள் இருந்திருந்தால் தற்போதைய அளவிற்கு அன்னிய முதலீடு வெளியேறியிருக்காது.
மேலும் பன்னாட்டு பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் இந்திய சந்தையைப் பற்றிய பொருளாதாரச் சரிவு குறித்தும் அதன் எதிரொலிகள் குறித்தும் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதனால் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை மட்டும் அல்லாமல் இந்திய சந்தை மீதுள்ள நம்பிக்கையும் இழந்து வருகின்றனர்.
இதோடு பங்குச்சந்தையிலிருந்து வெளியேறும் முதலீடுகள் அனைத்துத் தங்கம், கச்சா எண்ணெய் மற்றும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் காரணத்தால் இந்தியாவின் ரூபாய் மதிப்பிற்குக் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்யும் காரணத்தால் இதன் விலையும் அதிகரித்து வருகிறது. அதிக விலையில் நாம் இறக்குமதி செய்யும் போது அதற்கு அதிகளவிலான டாலர் தொகை கொடுக்க வேண்டும். இதனால் டாலர் இருப்பு குறைந்து ரூபாய் மதிப்பு பாதிப்படைந்து வருகிறது.
செவ்வாய்கிழமை நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.43 ரூபாய்க்கு துவங்கிய நிலையில் அதிகப்படியாக 71.80 ரூபாய் வரையில் சரிந்து, வர்த்தக முடிவில் 71.71 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.