சென்னை : நாட்டில் நிலவி வரும் தொடர்ச்சியான பொருளாதார மந்த நிலையால், பல துறைகள் படு வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றன. இந்த நிலையில் இந்த பணப் பிரச்சனையானது தெற்கு ரயில்வேயையும் விட்டு வைக்கவில்லை.
ஒரு புறம் பணப்பற்றாக்குறையால் தனது பல சேவைகளை நிறுத்தும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது தென்னக ரயில்வே.
இதனால் பல விதங்களில் பயணிகளின் கோபத்திற்கு ஆளாகலாம், என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடும் நிதிப்பிரச்சனை
நாட்டிலேயே மிகப்பெரிய துறையான ரயில்வே துறைக்கே இப்படி ஒரு நிலையா என்று கேட்டால், ஆமாம் அது உண்மை தான் என்கிறது சில செய்திகள். ஆமாங்க.. கடும் நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் தென்னக ரயில்வேக்கு, இம்மாத ஆகஸ்ட் முடிவுக்குள் போதுமான நிதி ஒதுக்காவிட்டால், தெற்கு ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு சேவைகள் தொடர்பான அனைத்து சேவைகளும் நிறுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து முன்னரே ரயில்வே அமைச்சகத்திற்கு SOS அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
என்ன சேவைகள்?
போதுமான நிதி இல்லாமையால், தெற்கு ரயில்வே நிர்வாகம் ரயில்களில் பூச்சி கட்டுப்பாடு, கைத்தறி ஒப்பந்தம், கழிவறைகள் சுத்தம் செய்தல் போன்ற ஒப்பந்த தாரர்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாததால், அளிக்கப்பட வேண்டிய நிதியை அளித்தால் மட்டுமே சேவையை அளிக்க முடியும் என்றும் எச்சரித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும் இல்லையெனில், கழிவறைகள் சுத்தம் செய்தல், பயணிக்களுக்கு ஏசி பெட்டிகளில் கொடுக்கப்படும் காட்டன் துணிகளை சரிவர கொடுக்க முடியாது என்றும், அது தவிர மற்ற பாரமரிப்பு சேவைகளையும் கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளது.
பயணிகளின் கோபத்துக்கு ஆளாக போகும் தெற்கு ரயில்வே
மேற்கூறிய பராமரிப்பு சேவைகளை சரி வர கொடுக்க முடியாவிட்டால், ரயில்வே நிர்வாகம், கண்டிப்பாக பயணிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். இது தவிர ஏசி பெட்டிகளில் காட்டன் துணிகளையும் கொடுக்க முடியாது. இதனால் பயணிகளின் புகார்கள் மேலும் அதிகரிக்கும். இதனால் பயணிகளின் புகார்களை எதிர்கொள்ளும் நிலையில் தெற்கு ரயில்வே அதிகாரிகள் உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு புறம் புகார்களும், மறுபுறம் ரயில்களில் சுகாதாரமற்ற கழிவறைகளில் பயணிக்க நேரிடும் என்றும் தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
போதுமான நிதி வழங்க வேண்டும்
இந்த பிரச்சனையை தீர்க்க தெற்கு ரயில்வேக்கு, அரசு போதுமான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அதோடு ஒப்பந்தாரர்களுக்கு நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. குறிப்பாக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள தொகையான 22 கோடி ரூபாயும், இது தவிர ஹவுஸ்கீப்பிங் சேவையை வழங்குவதற்கு 130 கோடி ரூபாயும் வழங்கப்பட வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நீண்ட தூர ரயில்கள்
குறிப்பாக நீண்ட தூரத்திலிருந்து வரும் 110 ரயில்களில் இந்த பிரச்சனை எதிரொலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனை கடந்த ஜூலை 5, 2019லிருந்தே காணப்பட்டாலும், ரயில்வே அமைச்சகம் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. மேலும் சில வாரங்களுக்கு முன்பு, பொது மேலாளர் ராகுல் ஜெயினை, மீண்டும் நினைவூட்டலை அனுப்புமாறு ரயில்வே அமைச்சக அதிகாரிகள் சிலர் கட்டாயப் படுத்தியாதாகவும், ரயில்வே அமைச்சக்கத்தின் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஆபத்தான நிலையில் தென்னக ரயில்வே
இது குறித்து ரயில்வே வாரியத்திற்கு தனது கடிதத்தில், அத்தியாவசியமான பயணிகள் வசதிக்கு ஏற்ப செய்யப்படும், சேவைகளான சலவை மற்றும் ஓபி.எச்.எஸ் (OBHS), பூச்சி கட்டுப்பாடு தொடர்பான சேவைகள் செய்ய, தொடர்ந்து நிதிப்பற்றாக்குறை நிலவி வருவதாகவும், வருவாயிலும் பற்றாக்குறை நிலவி வருவதால், தெற்கு ரயில்வே ஆபத்தான நிலையை எட்டியுள்ளது என்றும் ஜெயின் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம்.
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி குறைவு
ஒப்பந்த படி திட்டமிடப்பட்ட சேவைகளுக்கு 194 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2019 - 2020ம் நிதியாண்டில் பட்ஜெட்டில் மானியம் 108 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த மார்ச் 31 நிலவரப்படி 22 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும், இது தவிர 40 கோடி மதிப்புள்ள பில்கள் சமர்பிக்க தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
செலவுகள் அதிகம்
நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, ஏற்கனவே 39 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டிருப்பதாகவும், ஆனால் 155 கோடி ரூபாய் தேவை இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது கிடைக்கபெறும் நிதியை விட 86 கோடி ரூபாய் அதிகம் என்றும் கூறப்படுகிறது. ஆகஸ்ட் - செப்டம்பர் 2019- ல் செய்யப்படும் பணிகளுக்காக திரட்டப்பட்ட பில்களுக்கு மட்டுமே தற்போதுள்ள நிதி எங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்றும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
விரைவில் நிதி ஒதுக்கப்பட வேண்டும்
இந்த நிலையில் இது போன்ற நிதிப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும்போது, தெற்கு ரயில்வே 110 ரயில்களில், அனைத்து பணிகளையும் நிறுத்துவதை தவிர வேறு வழி தெரியவில்லை. இந்த சமயத்தில் ரயில்களில் விரைவில் ஒப்பந்தங்களை முடித்தல் அறிவிப்புகளை வழங்கத் தொடங்கும். இதனால் அத்தியாவசியாமான பூச்சி கட்டுப்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது, ஆக ரயில்வே அமைச்சகம் இது போன்ற அத்தியாவசிய பணிகளை தொடர, அவசர நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் ஜெயின் கூறியுள்ளார்.
பழைய நிலுவைத் தொகை
ஒப்பந்தாரர்களுக்கு பழைய நிலுவைத் தொகையை தீர்ப்பதற்கும், சேவைகளை எந்தவித தடையுமின்றி வைத்திருக்கவும் உடனடியாக 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். ஸ்வச் பாரத் அபியான் மற்றும் பல பிற தூய்மைப் பிரச்சாரங்களுக்கு ரயில்வே வாரியம் முக்கியத்துவம் அளித்திருக்கும் இந்த நேரத்தில், பண நெருக்கடியால் இந்த சேவைகளை செய்ய முடியாவிட்டால் மீண்டும் புகார்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் தற்போது தான் பாராமரிப்பு மற்றும் சுத்தம் தொடர்பான புகார்கள் குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
மொத்த ரயில்கள் இவ்வளவு தான்?
தெற்கு ரயில்வே அதன் மொத்த ரயில்களில் 74.5 சதவிகிதம் தமிழ் நாட்டிலும், மீதமுள்ளவை கேரளா, ஆந்திரா, கர்நாடாகா மற்றுப் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் வழியாகவும் ரயிகளை இயக்குகின்றன. மொத்தம் புறநகர் ரயில்கள் உள்பட 1,313 ரயில்களை இயக்குகிறது.