கெளவுஹாத்தி, அஸ்ஸாம்: அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் டோன் இ போலோ டீ எஸ்டேட்டினர் கோல்டன் நீடில் (Golden Needle) என்கிற ஒரு ரக டீயைப் பயிரிட்டு வருகிறார்கள்.
இப்போது இந்த கோல்டன் நீடில் ரக டீ கெளவுஹாத்தி டீ ஏல மையத்திலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட டீ என பெயர் எடுத்து இருக்கிறது. இந்த கோல்டன் நீடில் ரக டீயின் விலை ஒரு கிலோவுக்கு 75,000 ரூபாயாம். சராசரியாக இந்த டீத் தூள் அல்லது தேநீர் இலைகளைப் பயன்படுத்தி ஒரு கப் டீ போட வேண்டும் என்றால் கூட குறைந்தபட்சம் 375 ரூபாய் செலவழிக்க வேண்டுமே, எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்காக வேண்டும் என்றால் சுமார் 750 ரூபாய் வரை ஆகுமே என அலுத்துக் கொள்கிறார்கள் டீ பிரியர்கள்.
கடந்த ஆகஸ்ட் 13, 2019 அன்று தான் அஸ்ஸாமின் கோல்டன் பட்டர்ஃப்ளை (Golden Butterfly) ரக டீ கிலோவுக்கு 75,000 ஏலம் போனது. கோல்டன் பட்டர்ஃப்ளை ரக டீ ஏலம் போனது தான் அஸ்ஸாம் டீ ஏல மையத்தில் சாதனை விலையாக இருந்தது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே கோல்டன் நீடில் ரக டீயும் கிலோவுக்கு 75,000 ரூபாய்க்கு ஏலம் போய் சாதனையை சமன் செய்து இருக்கிறது.
கோல்டன் நீடில் ரக டீக்கு 75,000 ரூபாய் விலை கொடுத்தவர்கள் absolute Tea என்கிற ஆன்லைன் டீ வியாபார நிறுவனத்தினர் தானாம். கடந்த ஆண்டில் கோல்டன் நீடில் ரக டீ, அதிகபட்சமாக கிலோவுக்கு 39,000 ரூபாய் வரை விலை போனதாம். ஆக இந்த வருடம் சுமாராக 90 சதவிகிதம் அதிக விலைக்கு ஒரு கிலோ கோல்டன் நீடில் டீ ஏலம் போய் இருக்கிறது.
இது போன்ற அதிக விலை போகும் டீ ரகங்களை பயிரிடுவதாலேயே அருணாச்சலப் பிரதேசம் உலக தேநீர் வரைபடத்தில் தனி இடம் பிடித்து இருக்கிறது என்கிறார் கெளவுஹாத்தி டீ ஏல மையத்தின் செயலர் தினேஷ் பஹானி. கடந்த சில வருடங்களாக அருணாச்சலப் பிரதேசத்தின் டோன் இ போலோ எஸ்டேட்டினர் பயிரிடும் கோல்டன் நீடில் டீ-யை வாங்கி வருகிறோம். இந்த ரக டீ-க்கான ஏலம் சிறப்பாக இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார் கெளவுஹாத்தி டீ ஏல மையத்தின் செயலர் தினேஷ் பஹானி.