இந்தியாவில் கடந்த 5 வருடத்தில் மிகவும் வேகமாக வளர்ந்த துறைகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளது, அதில் மிக முக்கியமான ஒரு துறை டெலிகாம். இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள புரட்சி நாட்டில் துறைகளை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல உந்து சக்தியாக இருந்தது அதில் குறிப்பாக ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் புட் டெலிவரி, ஆன்லைன் மீடியா, இணையப் பணப் பரிமாற்றம் எனப் பல வர்த்தகங்கள் மேம்பட்டது.
இத்தகைய வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது இந்திய டெலிகாம் துறையில் இண்டர்நெட் விலை குறைப்பு.
5 வருடம்
கடந்த 5 வருடத்தில் இந்தியாவில் இண்டர்நெட் டேட்டா விலை சுமார் 95 சதவீதம் வரையில் குறைந்து தற்போது ஒரு ஜிபி டேட்டா வெறும் 11.78 ரூபாய்க்கு சமாணிய மக்களுக்குக் கிடைக்கிறது.
இதன் எதிரொலியாக இந்திய டெலிகாம் நிறுவனங்களின் வருவாயும் கடந்த 5 வருடத்தில் 2.5 மடங்கு உயர்ந்து 54,671 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டேட்டா பயன்பாடு
இதேபோல் 2014ஆம் ஆண்டில் 828 மில்லியன் ஜிபி ஆக இருந்த இண்டர்நெட் டேட்டா பயன்பாடு 2018இல் 56 மடங்கு அதிகரித்து 46,404 மில்லியன் ஜிபியாக உயர்ந்துள்ளது. மேலும் தனிநபர் பயன்பாட்டு அளவு வெறும் 0.27 ஜிபி அளவில் இருந்து 7.6 ஜிபி அளவிற்கு உயர்ந்துள்ளது.
முக்கிய மாநிலங்கள்
இந்தியாவில் டேட்டா பயன்பாட்டில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் மேற் வங்காளம், உத்திர பிரதேசம். அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் 100 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. 2018 வரையில் இந்த மாநிலங்களில் ஒவ்வொரு வருடமும் 100 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. மற்ற மாநிலங்களில் இதன் அளவு 50 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜியோ அறிமுகம்
2016ஆம் ஆண்டு இறுதியில் ஜியோ மக்களின் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், 2017ஆம் ஆண்டில் 20,092 மில்லியன் ஜிபி டேட்டா மக்கள் பயன்படுத்தியுள்ளனர். 2018இல் இதன் அளவு கிட்டத்தட்ட 131 சதவீதம் அதிரடியாக அதிகரித்து 46,404 மில்லியன் ஜிபியாக உயர்ந்துள்ளது.
வருமானம்
பயன்பாட்டு அளவுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருந்தாலும், சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து டெலிகாம் நிறுவனத்திற்குப் பெறப்படும் வருமானத்தின் அளவில் பெரிய அளவிலான மாற்றம் ஏதுமில்லை. 2014இல் 71.25 ரூபாயாக இருந்த ARPU அளவு 2018இல் 90.02 ரூபாய் அளவிற்கு மட்டுமே உயர்ந்துள்ளது.