மும்பை : ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ என்று ஆரம்பிக்கப்பட்டதோ, அன்றிலிருந்தே மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏழரை சனி தான். ஒரு புறம் பலத்த போட்டியுடன், பெரும் நஷ்டத்தையே கண்டன. இதில் பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் காணமல் போனது என்பதே உண்மை.
இந்த நிலையில் பெரும் நஷ்டத்தோடு ஜியோவோடு போட்டி போட முடியாமல், மற்ற நிறுவனங்கள் திணறி வரும் நிலையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சி கண்டதே உண்மை.

உண்மையை சொல்ல போனால் வோடபோன் ஐடியா கூட்டணியே, ஜியோவை சமாளிக்க போட்ட திட்டம் தான். எனினும் இவர்களின் ஆட்டம் ஜியோவிடம் செல்லவில்லை என்பதே அப்பட்டமான உண்மை.
இந்த நிலையிலேயே, ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாத வோடபோன் ஐடியா கூட்டணியின் தலைமை நிர்வாக அதிகாரி பாலேஷ் ஷர்மா, தனது பதவியைச் சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார் என்று கூறப்பட்டாலும், ஜியோவால் நிலவி வரும் வர்த்தகப் போட்டியும் ஒரு காரணம் என்றும் மறுபுறம் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் வோடபோன் ஐடியா குழுமத்தின் பிரதிநிதியாக இருக்கும் ரவீந்தர் தக்கார் தான் இனி இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 1994 முதல் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ரவீந்தருக்கு, 25 ஆண்டுகள் வோடபோனின் பல்வேறு தலைமை பதவிகளில் பணியாற்றிய அனுபவம் உண்டு. மேலும் இதே அளவில் தொலைத் தொடர்பு துறையிலும் அனுபவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
நல்ல அனுபவம் வாய்ந்த ரவீந்தர், உலகளாவிய சந்தைகளில், வோடபோனின் நிர்வாகியாக இருந்தவர். இந்த நிலையில் வோடபோன் ஐடியா மற்றும் சிந்து டவர்ஸின் வாரிய உறுப்பினராகவும் இருந்தவர். இது தவிர வோடபோன் ரூமேனியாவில் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் என்றும், மேலும் இன்னும் பல முக்கிய பதவிகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் எனில், மறுபுறம் படு மோசமான நிலையில் உள்ள இந்த நிறுவனத்தின் பங்கு விலை, தொடர் வீழ்ச்சி கண்டு வருகிறது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 32 ரூபாயாக இருந்த வோடபோன் பங்கின் விலை, கடந்த திங்கட்கிழமையன்று 5.99 ரூபாயாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications