சமீபத்தில் காபி டே நிறுவனத்தின் தலைவர் வி ஜி சித்தார்த்தா கூட, கடுமையான கடன் தொல்லை மற்றும் தன்னை வருமான வரித் துறை சார்ந்த அதிகாரிகள் அவமானப்படுத்தி தன் பங்குகளை பறிமுதல் செய்ததாகச் சொல்லி இருந்ததாக ஒரு கடிதத்தில் இருந்தது. அந்த பிரச்னைகளுக்கு விடையளிக்கும் விதத்தில் தற்போது ஒரு அதிரடி முடிவை மத்திய நிதி அமைச்சகம் எடுத்து இருக்கிறது.
வரும் அக்டோபர் 01, 2019 முதல் வருமான வரித் துறை சம்பந்தப்பட்ட ஆணைகள், நோட்டீஸ்கள், சம்மன்கள் என அனைத்து விஷயங்களும் மத்திய அலுவலகத்தின் அனுமதியோடு, கணினி வழியாகத்தான் அனுப்பப்படும் எனச் சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
அதோடு இந்த கணினி வழியாக கொடுக்கப்படும் அனைத்து விஷயங்களுக்கு ஒரு டி ஐ என் (DIN - Document Identification Number) இருக்கும். அப்படி இல்லாத வருமான வரித் துறை சார்ந்த டாக்குமெண்ட்கள் ஏற்றுக் கொள்ளத் தேவை இல்லை எனவும் சொல்லி இருக்கிறார். அதோடு அக்டோபர் 01, 2019-க்கு முன் கொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்து வருமான வரித் துறை சார்ந்த ஆணைகள், நோட்டீஸ்கள், சம்மன்கள் அனைத்தும் புதிதாக கணினி வழியாக அனுப்பப்பட வேண்டும் அல்லது அக்டோபர் 01, 2019-க்குள் அந்த ஆணைகள், நோட்டீஸ்கள், சம்மன்கள் தொடர்பான விஷயங்கள் ஒரு முடிவுக்கு எட்டப்பட்டிருக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
மிக முக்கியமாக வருமான வரித் துறையில் இருந்து வரி செலுத்துபவர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ கொடுக்கப்படும் ஆணைகள், நோட்டீஸ்கள், சம்மன்கள் அனைத்து பதில் அளிக்கத் தொடங்கி மூன்று மாதங்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.
ஆக இனி வி ஜி சித்தார்த்தா போல ஒருவர் வருமான வரித் துறையினரால் அவமானப்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்ள மாட்டார் என நம்பலாம். அதே நேரத்தில் கூடுதலாக செலுத்தி இருக்கும் வருமான வரிகளையும் விரைவில் வரி செலுத்தியவருக்கு திருப்பிக் கொடுக்க வழி வகை செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.