டெல்லி: சமீபத்தில், டெல்லியில் முத்தரப்பு ஒத்துழைப்பு மாநாடு (South south and Triangular Cooperation summit 2019) நடந்தது. ஒரு வளர்ந்த நாடு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வளரும் நாடுகளுக்கு உதவுவது தான் இந்த அமைப்பின் நோக்கம்.
இந்த மாநாட்டில் பேசிய மத்திய வணிக அமைச்சர் பியுஷ் கோயல் உலகில் ரெசசனைத் தவிர்க்க முடியாது. ரெசசன் வந்தால் அது எந்த நாட்டையும் விட்டு வைக்காது என உரக்கப் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.
அதற்கு ஒரே வழி வளர்ந்த நாடுகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் தன்னிச்சையான வர்த்தக நடவடிக்கைகளைத் தளர்த்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
நேரம்
சில வளர்ந்த நாடுகள் தங்கள் பொருளாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள இயற்றும் வர்த்தக பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகளை பரிசீலித்து மாற்றிக் கொள்ளும் நேரம் வந்து விட்டது. இப்படி ஒரு சில நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதால் உலக வர்த்தகத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படுகிறது எனவும் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். ஆனால் எந்த நாடுகள் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனச் சொல்லவில்லை.
எடுத்துக்காட்டு
கடந்த பல மாதங்களாக உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களான அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் நடக்கும் வர்த்தகப் போரால், உலகப் பொருளாதாரம் எவ்வளவு பெரிய விலையைக் கொடுத்து இருக்கிறது எனவும் சுட்டிக் காட்டி இருக்கிறார். இப்படியே சில நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் கொள்கைகள் தொடர்ந்தால் ரெசசன் நிச்சயம் வரும். வரும் ரெசசன் எந்த நாட்டையும் பாரபட்சம் இன்றி தாக்கும் எனவும் வலுவாகச் சொல்லி உணர்த்தி இருக்கிறார்.
பாதிப்புகள்
ரெசசன் வந்தால் அது வெறும் நிதி சார்ந்த பங்குச் சந்தைகளை மட்டும் பாதிக்காது. ரெசசனால் உற்பத்தி குறையும், உற்பத்தி குறைவால் நிறுவனங்களின் வருமானம் குறையும், வருமானக் குறைவைச் சரி செய்ய செலவை குறைக்க வேண்டும், செலவைக் குறைக்க கம்பெனிகள் தங்கள் ஊழியர்களை லேஆஃப் செய்து வீட்டுக்கு அனுப்புவார்கள், இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும், மீண்டும் தொழிற்துறை உற்பத்தியும் சரி, முதலீடுகளும் சரி பெரிய அடி வாங்கும் என விளக்கி இருக்கிறார். ஏற்கனவே ரெசசன் பயத்தில் உலக சந்தைகள் சரிந்து கொண்டிருப்பதையும் சொல்லி இருக்கிறார் பியுஷ் கோயல்.
சிக்னல்கள்
வரலாற்றில் ரெசசன் காலங்களுக்கு முன் எல்லாம் கடன் பத்திரங்கள் மீதான வருமானம் குறைந்து இருக்கிறது. தற்போதும் குறைந்து இருக்கிறது. 2008-ம் ஆண்டு காலங்களிலும் இப்படி கடன் பத்திரங்கள் மீதான வருமானங்கள் பெரிய அளவில் சரிந்ததும் குறிப்பிடத்தக்கது. எனவே உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளும், உலக வர்த்தகம் மேம்பட பொருளாதார சீர் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்.
ட்ரம்ப் காட்டம்
பியுஷ் கோயல் ஒரு பக்கம் இப்படி தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதுகாத்து உலக வர்த்தகத்தை கெடுக்க வேண்டாம் என வேண்டுகோள் வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ட்ரம்போ அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறிவிடுவோம் என சில மாதங்களுக்கு முன் சொல்லி பகீர் கிளப்பினார். அதோடு இந்தியாவும் சீனாவும் வளரும் நாடுகள் என்கிற பெயரில் நிறைய ஆதாயம் அடைவதாகவும் புகார் சொன்னார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரெசசனைத் தவிர்க்க வேண்டும்
ஆக பியுஷ் கோயல் அமெரிக்காவைத் தான் சொல்கிறாரோ எனவும் யோசிக்கத் தோன்றுகிறது. உலக பொருளாதாரத்தில் ஒரு எப்ரிய ரெசசன் வந்து பலரின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டு, அவர்கள் குடும்பம் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி அல்லாடுவதற்கு பதில், அரசாங்கங்கள் முன் கூட்டி செய்ய வேண்டிய நல்ல விஷயங்களை ஒற்றுமையாகச் செய்து இந்த ரெசசனில் சிக்காமல் தவிர்த்தால் நன்றாக இருக்கும். உலக நாடுகள் செய்யுமா..? பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.