இந்தியாவில் தொடர் சரிவில் தத்தளிக்கும் துறைகளில் ஒன்றாக விளங்கும் விமானப் போக்குவரத்துத் துறைக்கு மேலும் ஒரு பாதிப்பாக ஏர் இந்தியா புதிய பிரச்சனையைச் சந்தித்து உள்ளது.
ஏர் இந்தியா கடந்த 230 நாட்களாகச் சுமார் 5000 கோடி ரூபாய் அளவிற்கு வாங்கிய விமான எரிபொருள்களுக்கு இதுவரையில் பணம் செலுத்தவில்லை என்பதால் 3 முன்னணி பெட்ரோலிய நிறுவனங்கள் இனியும் ஏர் இந்தியாவிற்கு எரிபொருள் சப்ளை செய்ய முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதனால் ஏர் இந்தியாவின் விமானச் சேவை பாதிக்கும் எனத் தெரிகிறது.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா அரசு நிறுவனமாக இருந்தாலும் தனது விமான எரிபொருள் தேவையை வெளி நிறுவனங்களிடம் இருந்து தான் வாங்குகிறது. இப்படி ஏர் இந்தியா தற்போது இந்தியன் ஆயில், பார்த் பெட்ரோலியம் கார்ப், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்களும் இந்நிறுவனத்திற்கு நாட்டின் 6 முக்கிய விமான நிலையங்களில் ஏரிபொருள் சப்ளை நிறுத்தியுள்ளது.
6 விமான நிலையங்கள்
எண்ணெய் நிறுவனங்கள் தற்போது எடுத்துள்ள முடிவுகளின் படி ஏர் இந்தியாவில் கொச்சி, புனே, பாட்னா, ரான்சி, விசாகப்பட்டினம், மொகாலி ஆகிய விமான நிலையங்களில் முதல் கட்டமாக எரிபொருள் சப்ளைக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது.
குறைந்த பாதிப்பு
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு நகரங்களை ஒப்பிடுகையில் மேலே குறிப்பிட்ட 6 விமானநிலையங்களில் ஏர் இந்தியாவின் பயணிகள் எண்ணிக்கையும் சரி, சேவைகளும் சரி சற்றுக் குறைவு தான். இதனால் ஏர் இந்தியா வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் பாதிப்பு அடையமாட்டார்கள்.
90 நாட்கள்
பொதுவாக ஏர் இந்தியா நிறுவனம் வாங்கும் விமான எரிபொருள்-க்கு 90 நாட்களில் பணத்தைச் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது 230 நாட்கள் ஆகியும் 5000 கோடி ரூபாய் கொடுக்காதது ஏன்.
இதை எப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியில் சொல்லாமல் சமாளித்தது. இதிலும் முறைகேடு ஏற்பட்டு உள்ளதா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.
ஒரு லிட்டரின் விலை
சரி ஒரு லிட்டர் விமான எரிபொருள் (பெட்ரோல்) விலை எவ்வளவு தெரியுமா..? ஒரு கிலோலிட்டர் 63,295 ரூபாய். இது கடந்த நவம்பர் 2018இல் அதிகபடியான விலையாக 76,378 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.