2019-20ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ஜியோ சக போட்டி நிறுவனங்களை விடவும் அதிகளவிலான வருவாய் அளவை அடைந்து முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜியோ தனது வர்த்தகத்தைத் துவங்கி வெறும் 3 வருடம் மட்டுமே ஆன நிலையில் ஏர்டெல், வோடபோன் -ஐடியா போன்ற மாபெரும் நிறுவனங்களுடன் போட்டிப் போட்டு அதிக வருவாய் பெற்று இருப்பது மாபெரும் சாதனை.
ஜியோ
நடப்பு நிதியாண்டில் ஜூன் காலாண்டில் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் ஜியோ யாரும் எதிர்பார்க்காத வகையில் 10,900 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது, அதுவும் வர்த்தகத்தைத் துவங்கி வெறும் 3 வருடத்தில் இவ்வளவு பெரிய சாதனை படைத்துள்ளது எனத் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.
ஏர்டெல், வோடபோன் -ஐடியா
செப்டம்பர் 2016இல் துவங்கப்பட்ட ஜியோ 10,900 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ள நிலையில், 1995இல் துவங்கப்பட்ட பார்தி ஏர்டெல் 10,701.5 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா நிறுவன 10 வருடத்திற்கு முன்பிருந்த வர்த்தகத்திலிருந்தாலும், இரு நிறுவனங்களும் கடந்த ஆகஸ்ட் மாதம் தான் இணைந்தது. இந்த இணைக்கப்பட்ட நிறுவனத்தின் ஜூன் காலாண்டில் 9808.92 கோடி ரூபாய் வருவாயை அடைந்துள்ளது.
வளர்ச்சி
ஜியோ நிறுவனத்தின் வருவாய் ஒவ்வொரு வருடம் சராசரியாக 9 சதவீத வளர்ச்சியை அடைந்து வருகிறது. காலாண்டில் அடிப்படையில் பார்க்கும் போது 5.2 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த அதிரிபுதிரியான வளர்ச்சியில் ஜியோ நாட்டின் மாபெரும் டெலிகாம் நிறுவனமாக உயர்ந்துள்ளது.
சந்தை வர்த்தகம்
இதுமட்டும் அல்லாமல் ஜியோ சுமார் 31.7 சந்தை வர்த்தகத்தைக் கைப்பற்றி வலிமையோடு வர்த்தகம் செய்து வருகிறது. ஏர்டெல் நிறுவனம் 30 சதவீத வர்த்தகமும், வோடபோன் 28.1 சதவீத வர்த்தகமும் பெற்று உள்ளது.
பிஎஸ்என்எல் இதேகாலகட்டத்தில் 4,295.96 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.