டெல்லி : பிரதமர் மோடி 2.0 அரசு வந்த பின், நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்க, தொடர்ந்து பல விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரண்டாவது முறையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த நிர்மலா சீதாரமன் பல பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக கூறியுள்ளார்.
பொருளாதாரத்தை சீர்படுத்த இந்த பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, பெரிதும் உதவும் என்று கூறிய நிர்மலா சீதாராமன், வங்கிகளும் இதற்காக ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சரி முன்னர் 27 பொதுத்துறை வங்கிகளாக இருந்த நிலையில், தற்போது 12 பொதுத்துறை வங்கிகளாக மட்டுமே செயல்படும் என்றும் கூறியுள்ள நிலையில், இதற்காக ஊழியர்களுக்கும் சரி, வங்கிகளுக்கு சரி, புது விதமான புதிய நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த இணைப்பிற்கு பிறகு வங்கி இயக்குனர்களுக்கு சிறந்த ஒரு நோக்கங்களுக்காக தனியாக பயிற்சி வழங்கப்படும் என்றும், இது குறித்தான ஆணை விரைவில் வாரியங்களுக்கு அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார்.
இது தவிர நிர்வாகக் குழுக்களில் இயக்குனர்களுக்கு நீண்ட கால விதிமுறைகள் வழங்கப்படும் என்றும், இது தவிர இந்த பொதுத்துறை வங்கிகளுக்கு Chief Risk Officer என்ற அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் வாடிக்கையாளர்களுக்கு இந்த இணைப்பினால் வாடிக்கையாளர்களுக்கு, எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்றும், இதற்காக ஒன்றிணைக்கப்பட்ட வங்கிகள், ஒரே தொழில்நுட்ப மேடையே வழங்க நாங்கள் உறுதி கொண்டுள்ளோம் என்றும், நிதிச் செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த இணைப்பின் மூலம் பஞ்சாப் நேஷனல் பேங்க் இரண்டாவது பொதுத்துறை வங்கியாகவும், கனரா வங்கி 4 வது பெரிய பொதுத்துறை வங்கியாகவும், யூனியன் பேங்க் 5 வது பெரிய பொதுத்துறை வங்கியாகவும், இந்தியன் பேங்க் 7 வது பொதுத்துறை வங்கியாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த வங்கிகள் முன்ன இருந்ததை விட இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்றும், கடன் வழங்குதலும் அதிகரிக்கும் என்றும், இதனால் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும் என்றும் நிபுனர்கள் மத்தியில் கூறப்படுகிறது.