இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்குக் கள்ள நோட்டு என்பது பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் ஒரு முக்கியமாக விஷயம். இது ஒரு பக்கம் இருந்தாலும் மக்களை ஏமாற்றுவதில் கள்ளநோட்டு முக்கியப் பங்கு வகிக்கிறது.
பணமதிப்பிழப்பு
மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது, மக்களின் பணப் புழக்கத்திற்காகப் பல புதிய பாதுகாப்பு அம்சங்கள் உடன் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இப்புதிய ரூபாய் நோட்டுகளைப் போல் கள்ளநோட்டு அச்சடிக்க மிகவும் கடினமான ஒன்று எனப் பெருமை பேசப்பட்டது.
ஆனால் இப்போது நடந்துள்ள விஷயத்தைப் பார்க்கும் போது வருத்தமாக உள்ளது.
போலி ரூபாய் நோட்டுகள்
2018-19 ஆண்டுக் காலத்தில் போலி ரூபாய் நோட்டுகள் பெருமளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் 5.6 சதவீத ரூபாய் நோட்டுகள் மத்திய ரிசர்வ் வங்கியிலும், மீதமுள்ள 94.4 சதவீத போலி ரூபாய் நோட்டுகள் வணிக வங்கிகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
10,20,50 ரூபாய் நோட்டுகள்
இதேபோல் கடந்த நிதியாண்டை விடவும் 2018-19ஆம் நிதியாண்டில் 10 ரூபாய் மதிப்பின் கள்ள நோட்டு எண்ணிக்கை 20.2 சதவீதமும், 20 ரூபாய் மதிப்பின் கள்ள நோட்டு எண்ணிக்கை 87.2 சதவீதமும், 50 ரூபாய் மதிப்பின் கள்ள நோட்டு எண்ணிக்கை 57.3 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள்
ஆனால் 100 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் எப்போதும் இல்லாத வகையில் 7.5 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 2017இல் அறிமுகம் செய்யப்பட்ட 200 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 79இல் இருந்து 12,728 ஆக உயர்ந்துள்ளது.
500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள்
இவை அனைத்திற்கும் தாண்டி 500 ரூபாய் மதிப்புடைய கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை இந்த ஒரு வருட காலத்தில் மட்டும் 121 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இது வங்கி துறையில் அதிர்ச்சி அளிக்கும் ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இதோடு 2000 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 21.9 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
அச்சிடும் செலவு
பணமதிப்பிழப்புக்குப் பின் இந்தியாவில் வேகமாகப் பணபுழக்கை அதிகரிக்க வேண்டும் என நினைத்து மத்திய அரசு கிட்டத்தட்ட 4800 கோடி ரூபாய்க்கு மேல் பணம் செலவு செய்து அதிகளவிலான புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட்டு வந்த அதே நேரத்தில் மோசடி கும்பல்கள் கள்ள நோட்டுகளையும் அச்சிட்டு வெளியிட்டு வந்துள்ளது.
உஷார்
அரசு பிடித்துள்ள கள்ள நோட்டுகளின் அளவு மிகவும் குறைவான அளவு தான் என்று பலதரப்பு கூறப்பட்டு வரும் நிலையில் சந்தையில் இன்னமும் அதிகளவிலான கள்ள நோட்டுகள் உலாவி கொண்டு தான் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் அரசை நம்புவதை விட மக்களாகிய நாம் உஷாராக இருப்பது தான் சிறந்தது.
இனி நீங்கள் பெறும் ஒவ்வொரு 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளைச் செக் செய்து வாங்குவது நல்லது.