இந்தியாவில் பங்குச் சந்தைகளில் தில்லாக களம் இறங்கி வர்த்தகம் செய்பவர்களின் எண்ணிக்கையே மிகக் குறைவு. பெரிய பெரிய பணக்காரர்கள் கூட நேரடியாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யாமல் இருக்கிறார்கள். காரணம், நல்ல படியாக வர்த்தகம் செய்து நல்ல லாபம் பார்க்க முடியும் என்கிற நம்பிக்கை கிடையாது.
சரி அதெல்லாம் ஒரு பக்கம் போகட்டும். இங்கு இன்னொரு பக்கம் பங்குச் சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்தால் பரவாயில்லை. ஆனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பயன்படுத்தும் டெக்னாலஜி காரணமாக நட்டம் அடைந்து இருக்கிறார்.
இந்தியாவில் பங்குச்சந்தை முதலீட்டுக்காகப் பல வர்த்தகத் தளம் இருந்தாலும், இதில் சில மட்டுமே வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் தான் ஜீரோதா, பல லட்ச வாடிக்கையாளர்களைக் கொண்டு சிறந்து விளங்கி வரும் ஒரு நிறுவனம்.
செவ்வாய்க்கிழமை ஜீரோதாவின் கையிட் வர்த்தகத் தளத்தில் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாகக் காலை 9.55 முதல் 10.20 வரையிலான 25 நிமிடம் வரையில் இந்த வர்த்தகத் தளம் முடங்கியது.
இதனால் பல வாடிக்கையாளர்கள் பங்குகளை வாங்க முடியாமல் தவித்தனர். இதனால் பலரும் பல லட்ச லாபத்தை இழக்க வேண்டிய மோசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதில் கடுப்பான வாடிக்கையாளரும் மக்களும், டிவிட்டரில் ஜீரோதா நிறுவனத்தை வறுத்தெடுத்தனர். இதேபோன்று பல முறை நடைப்பெற்று உள்ளதால் ஜீரோதா சேவையைப் பயன்படுத்தும் பலரும் சமுக வலைத்தளத்தில் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதிலும் ஒரு முதலீட்டாளர் சமுக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவில் ஜீரோதா தளத்தின் தொழில்நுட்ப கோளாறு காரணமாகச் சுமார் 2 லட்ச லாபத்தை இழந்துள்ளேன், இதை ஜீரோதா ஈடு செய்யுமா என்று கேட்டு உள்ளார்.
இதற்கு ஜீரோதா நிறுவனத்தின் உயர் அதிகாரி கூறுகையில், தொழில்நுட்ப கோளாறுகள் தவிர்க்க முடியாதது, நாங்கள் இறுதிவரையில் 100 சதவீத அப் டைம் வசதியைக் கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். ஆனால் இந்தக் கோளாறு காரணமாக வாடிக்கையாளர்கள் இழந்த தொகையை எங்களால் திருப்பிக் கொடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
கடைசியில் முதலீட்டாளர்களுக்குத் தான் நஷ்டம்.