டெல்லி: உலக நாடுகள் தொடங்கி தரகு நிறுவனங்கள், அனலிஸ்டுகள், பொருளாதார வல்லுநர்கள் என பல தரப்பினரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த இந்தியாவின் ஜிடிபி தரவுகள் நேற்று மாலை இந்திய புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் 2019 - 20 நிதி ஆண்டின் முதல் காலாண்டுக்கான ஜிடிபி வெறும் 5 சதவிகித வளர்ச்சி கண்டு சரிந்து இருக்கிறது.
நேற்று ஒரே நேரத்தில் எதிர்பாராத வங்கிகள் இணைப்பு மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் ஜிடிபி தரவுகள் என இரண்டும் சேர்ந்து வர மக்கள் அதிகம் பயன்படுத்தும் வங்கிகளைப் பற்றிய செய்திகளே முன்னிலை வகித்தன.
ஜிடிபி
கான்ஸ்டண்ட் விலை (Constant Price) அடிப்படையில் 2019 - 20 நிதி ஆண்டின் ஜூன் 2019 காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 35.85 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. 2018 - 19 ஜூன் 2018 காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 34.14 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. ஆக இந்த இரண்டு ஜிடிபி தரவுகளுக்கும் இடையிலான வளர்ச்சி 5 சதவிகிதம். அதைத் தான் நாம் ஜிடிபி வளர்ச்சி எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.
ஏன் கவனம் பெறவில்லை
பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சேவையை ப் பற்றி ஒரு செய்தி வந்தால் அதைப் பற்றி விசாரித்து படிப்போமா இல்லை நம்மை நேரடியாக பாதிக்காத ஒரு விஷயம் வந்தால் அதைப் பற்றி அதிகம் தேடிப் படிப்போமா..? இயற்கையாகவே நாம் பயன்படுத்தும் சேவையைப் பற்றி வரும் விஷயத்தைத் தான் படிப்போம். அது தான் நேற்று நடந்து இருக்கிறது. ஆனால் ஜிடிபி நாம் நினைக்கும் அளவுக்கு ஒதுக்க வேண்டிய விஷயம் இல்லை எனச் சொல்லி இருக்கிறார் பொருளாதார வல்லுநர் நாகராஜ்.
பொருளாதார வல்லுநர்
ஆர் நாகராஜ், டெல்லி இந்திரா காந்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். இந்திய ஜிடிபி தரவுகள் குறைவது, இந்தியாவில் இருக்கும் ஏழைகள் கையில் புழங்கும் பணப் புழக்கம் குறைவதற்குச் சமம் எனச் சொல்லி இருக்கிறார். இந்திய ஜிடிபி எப்படி இந்திய ஏழை மக்களை பாதிக்கிறது எனவும் விளக்கி இருக்கிறார்.
தனி நபர் வருமானம்
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் இந்தியர் ஒருவரின் கையில் 10,534 ரூபாய் தனி நபர் வருமானமாகச் சொல்லி இருக்கிறார்கள். இப்போது 2019 - 20 நிதி ஆண்டில் 5 சதவிகித ஜிடிபி வளர்ச்சி என வைத்துக் கொண்டால் 526 ரூபாய் தனி நபர் வருமானம் அதிகரிக்கும். ஒருவேளை இந்திய ஜிடிபி 4 சதவிகிதமாக குறைந்தால் 421 ரூபாயாகத் தான் அதிகரிக்கும். ஆக இந்த ஒரு சதவிகித மாற்றத்தில் ஒரு சாமானிய இந்தியர் கைக்கு வரும் பணம் 5% ஜிடிபி வளர்ச்சியின் போது 526 ரூபாயாகவும், 4% ஜிடிபி வளர்ச்சி என்றால் 421 ரூபாயாகவும் இருக்கிறது.
ஜிடிபி வளர்ச்சி மாற்றம்
ஆக ஒரு சதவிகித ஜிடிபி வளர்ச்சி மாற்றத்தில் ஒரு சாமானியருக்கு வரும் பணத்தின் அளவு 105 ரூபாய் குறைகிறது என்றால், ஆண்டுக்கு 1,260 ரூபாய் குறைகிறது. அவர்கள் செலவழிக்கும் திறனும் அந்த அளவுக்கு குறைகிறது என்று தானே பொருள். ஆக இந்தியாவின் ஜிடிபி சரிகிறது என்றால் தனி நபர்கள் கையில் இருக்கும் வருமானமும் சரிவதாகப் பொருள். ஆக ஏழை பணக்காரர்கள் மத்தியில் இருக்கும் இடைவெளி இன்னும் அதிகரிக்கும்.
சரிந்தால் சரியும்
இந்தியாவின் ஜிடிபி சரிந்தால், ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆகிக் கொண்டே இருப்பார்கள். இந்தியாவின் ஜிடிபி சரிவினால், பெரிய பெரிய பணக்காரர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட ஏழைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம் எனவும் சொல்லி இருக்கிறார். அதோடு வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும், வேலைவாய்ப்புகள் கூட பெரிய அளவில் சரியலாம் எனவும் எச்சரித்து இருக்கிறார்.