இந்திய பொருளாதாரத்தின் தொடர் சரிவால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாத சரிவை செவ்வாய்க்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் சந்தித்துள்ளது. ரூபாய் மதிப்பின் இந்தச் சரிவு பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இதனால் இனி வரும் நாட்களில் இந்தியப் பங்குச்சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் பெரும் அளவிற்கு வெளியேறும் எனத் திட்டவட்டமாகத் தெரிகிறது.
அரசு பத்திரங்கள்
இதுமட்டும் அல்லாமல் நாணய மதிப்பின் சரிவால் 10 வருட அரசு பத்திரங்கள் மீதான லாப அளவீடுகள் சரிந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ரூபாய் மதிப்பின் சரிவை ஈடு செய்ய ரிசர்வ் வங்கி அன்னிய முதலீட்டு மற்றும் உள்நாட்டு ஈர்க்கும் வகையில் வட்டி விகிதத்தைக் குறைக்க முற்படும். இது பத்திர முதலீட்டை பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் மதிப்பு
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.39 ரூபாயாகச் சரிந்துள்ளது. இந்த அளவீடு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சந்தித்த அளவீடு. மேலும் திங்கட்கிழமை வர்த்தகத்தை ஒப்பிடுகையில் செவ்வாய்க்கிழமை 1.36 சதவீதம் சரிந்துள்ளது.
வட்டி விகிதம்
10 வருட அரசு பத்திர முதலீட்டின் மீதான வட்டி விகிதம் 4 அடிப்படை புள்ளிகள் குறைந்து 6.521 சதவீதமாக உள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இது 6.559 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை
இதன் எதிரொலியாக அடுத்தச் சில நாட்களுக்கு இந்திய சந்தையிலிருந்து அன்னிய முதலீடு அதிகளவில் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு அடுத்தச் சில நாட்களுக்குத் தொடர் சரிவில் தான் இருக்கும்.
என முதலீட்டாளர்கள் கவனமாகச் செயல்பட வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்து நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில் தற்போது நாட்டின் 8 முக்கியத் துறைகளின் வளர்ச்சி பெரிய அளவில் பாதிப்பை அடைந்துள்ளது.
8 துறைகள்
2018 ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக இருந்த 8 துறைகளின் வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் ஜூலை மாதத்தில் வெறும் 2.1 சதவீதம் என்கிற மோசமான நிலையை அடைந்துள்ளது.
அதிலும் முக்கியமான நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்புப் பொருட்கள் துறையின் வளர்ச்சி ஜூலை மாதத்தில் எதிர்மறையான வளர்ச்சியை அடைந்துள்ளது நாட்டு மக்களுக்கும், தொழிற்துறைக்கும் பெரும் அதிர்ச்சியாக விளங்குகிறது.