இந்திய ஆட்டோமொபைல் சந்தை மிகப்பெரிய பாதிப்பில் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் இது அனைத்தும் இந்திய நிறுவனங்களுக்கு மட்டும் தான் வெளிநாட்டு ஆட்டோமொபல் நிறுவனங்கள் இன்றும் கார் விற்பனையில் நல்ல வர்த்தகத்தைப் பெற்று வருவது உங்களுக்குத் தெரியுமா..?
எப்படி ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி, விவோ, ஓப்போ போன்ற நிறுவனங்கள் நுழைந்து மொத்த சந்தையையும் தலைகீழாக மாற்றியதோ, அதேபோல் தற்போது பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையைப் புரட்டிப்போட களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது, சீன நிறுவனத்தின் உதவியில் இயங்கும் பிரிட்டன் நிறுவனமான எம்ஜி மற்றும் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் களமிறங்கியுள்ளது. இவ்விரு நிறுவனங்களும் இந்திய ஆட்டோமொபைல் சந்தை மிகவும் மோசமான நிலையில் இருக்கும் போது கூடச் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
அதிலும் குறிப்பாக ஜூலை மாதத்தில் அறிமுகமான எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் மாடல் கார்கள் இந்திய மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிறுவனம் ஜூலை மாதத்தில் 1,508 கார்களை விற்பனை செய்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் 2,018 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
இரு மாதங்களில் சுமார் 33.82 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது எம்ஜி ஹெக்டர் மாடல் கார். இந்தியா போன்ற நடுத்தர மக்கள் வாழும் நாட்டில் புதிய பிராண்டுகளுக்கு அறிமுகத்திலேயே இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பது வியக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.
இதுமட்டும் அல்லாமல் சுமார் 15,000 கார்களுக்கான ஆர்டரையும், கிட்டதட்ட 28,000 கார்களுக்கான புக்கிங்-ம் எம்ஜி மோட்டார்ஸ் பெற்றுள்ளது எம்ஜி நிறுவனம். இந்த அறிமுக விற்பனையில் மக்களின் நம்பிக்கையை எம்ஜி பெற்றுவிட்டால் நிச்சயம் வெற்றி தான்.
இதோ காலக்கட்டத்தில் எஸ்யூவி பிரிவில் மஹிந்திரா வெறும் 968 XUV500 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதுவே ஜூலை மாதத்தில் இதன் எண்ணிக்கை 1116 ஆக இருந்தது. இது கிட்டத்தட்ட 13.26 சதவீத சரிவு.
மேலும் டாடா மோட்டார்ஸின் ஹேரியர் கார் விற்பனை எண்ணிக்கை ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் மத்தியில் 14.19 சதவீதம் சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் டாடா வெறும் 635 ஹேரியர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
எம்ஜி ஹெக்டர் போல் மற்றொரு வெளிநாட்டுப் பிராண்ட் ஆன ஜீப் தனது காம்பஸ் கார் விற்பனையில் 18.86 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து அகஸ்ட் மாதத்தில் 605 கார்களை விற்பனை செய்துள்ளது.
6 வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகமான கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் காரும் தரத்திலும், வடிவத்திலும் சிறந்து விளங்குகிறது. இதனால் அறிமுகம் செய்யப்பட்ட 6 வாரத்திலேயே கியா நிறுவனம் சுமார் 30000 கார்களுக்கான புக்கிங் பெற்றுள்ளது.
இப்படிப் பார்க்கும்போது இந்தியாவில் தற்போது வெளிநாட்டுப் பிராண்ட் கார்களுக்கு மவுசு அதிகமாகியுள்ளது. அனைத்திற்கும் மேலாக இந்தப் பிராண்டுகளின் கார்கள் தரத்தில் சிறந்து விளங்குவதோடு, இந்திய கார்களின் விலைக்குக் கிட்டதட்ட நெருங்கிவிடுவதால் நாட்டு மக்கள் தரத்தை பார்த்து வெளிநாட்டு பிராண்டு கார்கள் மீது மோகம் கொள்கின்றனர்.
இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இதையும் மனத்தில் வைத்துக்கொண்டு இனி வரும் காலத்தில் சரியாகத் திட்டமிட வேண்டும்.