மும்பை: இந்தியாவின் பணக்கார குடும்பங்களைப் பட்டியல் போட்டால், இன்றைய தேதிக்கு சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அண்டிலா வீட்டில் வசிக்கும் முகேஷ் அம்பானியின் குடும்பம் தான் முதலில் நினைவுக்கு வரும்.
இந்தியப் பொருளாதாரமே மிக மோசமான நிலையில் பயணித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், இருக்கும் வேலையே நிலைக்குமா என்றே தெரியாத போது பணக்கார குடும்பங்களைப் பற்றி நமக்கு எதற்கு எனக் கேட்கிறீர்களா..?
காரணம் இருக்கிறதே..! ஏன் என்றால் அம்பானி குடும்பத்தினர்கள் மட்டும் இந்த பொருளாதார நெருக்கடியால் சுமார் 821 கோடி ரூபாயை இழந்து இருக்கிறார்களே..!
821 கோடியா..?
ஆம் சரியாகச் சொல்ல வேண்டுமானால் 821,49,86,648 ரூபாயை (821 கோடியே 49 லட்சத்து 86 ஆயிரத்து 648 ரூபாய்) இழந்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியல் இடப்பட்டு இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி தான். இந்த நட்டத்தை கடந்த ஒரு வருடத்துக்கு மட்டும் கணக்கிட்டுப் பார்த்ததில் தான் இந்த அதிர்ச்சித் தகவல்கள் நமக்கு கிடைத்து இருக்கின்றன.
கடந்த ஒரு வருடத்தில்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலை கடந்த 25 அக்டோபர் 2018 அன்று 1,016 என்கிற 52 வார இறக்க விலையைத் தொட்டது. அதன் பின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செய்கைகள், ஆண்டுப் பொதுக் கூட்டம், முகேஷ் அம்பானியின் சில அதிரடி முடிவுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் விலை ஏற்றம் காணத் தொடங்கியது. இந்த முறை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை ஏற்றம் சுமார் 40 சதவிகிதம் வரை எகிறியது.
40 % வளர்ச்சியா..?
ஆம் 40 சதவிகிதம் வளர்ச்சி கண்டது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். அதுவும் அடுத்த ஏழே மாதங்களில் இந்த அசுர வளர்ச்சி கண்டு இருக்கிறது. 03 மே 2019 அன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை தன் வாழ் நாள் உச்சமான 1,416 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இந்த சமயத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமாராக 8.9 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது.
பங்குகள் விவரம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முகேஷ் அம்பானியின் தாயார் கோகிலா பென் பெயரில் 1,46,62,148 பங்குகள், முகேஷ் அம்பானியின் பெயரில் 72,31,692 லட்சம் பங்குகள் இருக்கிறதாம். முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி 67,96,292 லட்சம் பங்குகளை வைத்திருக்கிறார். அதே போல முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி 67,28,780 பங்குகள் மற்றும் மகன் ஆகாஷ் அம்பானி 67,26,380 லட்சம் பங்குகளை வைத்திருக்கிறார்கள். மற்றொரு மகனான ஆனந்த் அம்பானி பெயரில் 2 லட்சம் பங்குகள் இருக்கிறதாம்.
குடும்ப நட்டம்
ஆக இவர்கள் வைத்திருக்கும் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 4,23,45,292. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலை 1,416 ரூபாய் இருந்த போது இந்த 4.23 கோடி பங்குகளின் சொத்து மதிப்பு 5,996 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை சுமாராக 1,222 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஆக தற்போது இந்த 4.23 கோடி பங்குகளின் விலை 821.49 கோடி ரூபாய் சரிந்து 5,174 கோடி ரூபாயாக இருக்கிறது.
எதை எல்லாம் சந்திக்க வேண்டுமோ
அம்பானி குடும்பத்துக்கே 821 கோடி நட்டம் என்றால் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இந்த பொருளாதார மந்த நிலை, இன்னும் எத்தனை கோர சம்பவங்களை அரங்கேற்ற இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் நாம் இன்று பார்த்துக் கொண்டு இருக்கும் வேலை, இந்த பொருளாதார மந்த நிலை காரணமாக பறி போகாமல் இருந்தாலே பெரிய விஷயமாகத் தான் பார்க்கிறார்கள் சாமானியர்கள். அதை அரசு தான் கவனத்தில் எடுத்துக் கொண்டு எதையாவது செய்ய வேண்டும். செய்யுமா அரசு..?