டெல்லி: இனி வேப்பிலை குச்சியால் பல் துலக்குங்கள் என்றும், தண்ணீரை கைகளால் கப் போன்று உபயோகித்து குடியுங்கள், இந்தியாவின் பாரம்பரிய பழக்கங்களை பின்பற்றுங்கள் என்றும், பாஜகாவின் எம்.பியும், வழக்கறிஞருமான மீனாட்சி லேகி, அதிரடியான ஒரு கருத்தை பரிந்துரை செய்துள்ளார்.
குறிப்பிட்ட சில துறைகள் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பாஜாவின் எம்.பியும், ஒரு வழக்கறிஞருமான, ஒரு முழு நேர அரசியல்வாதி இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது இத்துறையில் சற்று கடுப்பை கிளப்பியுள்ளது என்றே கூறலாம்.
இது நல்ல விஷயமாக கருதப்பட்டாலும், ஏற்கனவே சற்று சரிவை கண்டு கொண்டிருக்கும் எஃப்.எம்.சி.ஜி துறைக்கு, இது எதிர்மாறான கருத்தாகவும் உள்ளது.
எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களின் கதி என்ன?
ஒரு புறம் சரிந்து வரும் துறைகளை மீட்க அரசு பல்வேறு விதமான துரித நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இவர் சொல்வதை போல், அனைவரும் பேஸ்ட்டை விடுத்து வேம்புக்கு மாறினால், எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களும், அடுத்து ஆட்டோமொபைல் துறைக்கு அடுத்த படியாக செல்ல நேரிடும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள லேகி இந்தியா பூர்வீகமான பழைய விஷயங்களை விட்டு, அதை நகலெடுப்பதன் மூலம் இந்தியாவின் ஆற்றலையும் வளத்தையும் இது வீணாக்கியது என்றும் கூறியுள்ளார்.
கண்ணாடி பாட்டில்கள் வேண்டாம்?
ஏன் நமக்கு தண்ணீர் குடிக்க பாட்டில்கள் தேவை? நாம் பள்ளியில் இருந்த போது, நம் கைகளாலேயே தண்ணீரைக் குடிப்போம். இது மிக சுகாதாரமான வழி என்றும் நான் கருதுகிறேன். ஏனெனில் நீங்கள் உங்கள் கைகளை கழுவியிருக்கிறீர்கள். மேலும் நாம் முன்னர் கரும்பு கூடையை பொருட்களை எடுத்து செல்ல பயன்படுத்தினோம், ஆனால் அதையும் மறந்து விட்டோம். அதோடு நாம் வேப்பம் குச்சியில் பல் துலக்குவதையும் மறந்து விட்டோம். இப்பொழுது பிளாஸ்டிக் டூத் பிரஸ்களையே பயன்படுத்துகிறோம். இவை அனைத்தும் குப்பை தொட்டிகளுக்கு சென்று, பின்னர் மண்ணுக்கு செல்கின்றது என்றும் கூறியுள்ளார்.
பழைய துணிகளை பயன்படுத்துங்கள்
மேலும் தற்போது அரசு ஒரு முறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்குகளை தடை செய்துள்ள நிலையில், பழைய துணிகளில் பைகள் தைத்து உபயோகிக்கவும், சானிட்டரி பேட்களை இதிலிருந்து தயாரிக்கவும் பரிந்துரை செய்துள்ளார். முன்னதாக பெண்கள் இந்த சானிட்டரி நாப்கின்கள் மீது 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதித்ததற்காக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறிய லேகி, இந்த பாலிமர்களை ஊக்குவிப்பதன் மூலம் இது எவ்வளவு நிலங்களை கையகப்படுத்தியுள்ளன, ஆனால் இதைப்பற்றி யாரும் பேசுவது இல்லை என்றும் கூறியவர், பாலிமர் ஊக்குவிப்பதற்காக ஜி.எஸ்.டி விகிதம் 18 சதவிகிதம் அல்ல 28 சதவிகிதமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அதிரடியான ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார்.
தொழில் துறையினருக்கு வேண்டுகோள்
பிரதமர் நரேந்திர மோடி மக்கள் அனைவரையும், ஒரு முறை மட்டும் உபயோகிக்கும் பிளாஸ்டிக்குகளை தவிர்க்க வேண்டும் என்றும், சுதந்திர தின விழாவில் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் சில துறைகளில் மட்டும் தடை செய்யப்பட்டுள்ள ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தும், பிளாஸ்டிக். வரும் அக்டோபர் 2 முதல் இன்னும் பல துறைகளில் தடை செய்யப்படலாம் என்றும் லேகி கூறியுள்ளார். மேலும் தொழில் நுட்ப வல்லுனர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதற்கான புதுமையான வழிகளையும் காண வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இலக்கை அடைய இந்த நடவடிக்கை போதுமா?
ஒரு புறம் மத்திய அரசு 2024க்குள் 5 டிரில்லியன் டாலர் இலக்கை அடைய வேண்டும் என்றும் கூறுவது நன்றாகத் தான் உள்ளது. ஆனால் இப்படி ஒவ்வொரு துறையிலும் அதற்கேற்றவாறு தடை கற்களை வைத்தால் மக்கள் எப்படி தொழிலில் முன்னேற்றுவார்கள். மாறாக ஏற்கனவே இருக்கும் தொழிலை விட்டு ஓடித் தான் போவார்கள். இதனால் பொருளாதார மந்தம் இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். மாறாக தொழில் துறையை ஊக்குவிக்க அரசு முயற்சி செய்து வந்தாலும், இன்னும் கூடுதலான முயற்சிகளை செய்ய வேண்டும். முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்பதே தொழில்துறையின் கருத்தாக உள்ளது.