டெல்லி : நலிந்து வரும் பொருளாதாரம், சரிந்து வரும் பல துறைகளின் வளர்ச்சி என பலதரப்பிலும் இந்தியாவை ஆட்டிப் படைத்து வரும் நிலையில், மேலும் கவலை கொள்ளும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.
சரி அப்படி என்ன கவலை என்று கேட்கிறீர்களா? வர்த்தக பற்றாக்குறை தான். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தகத்தின் இடையே நிலவி வரும், மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறையே என்றும் கூறப்படுகிறது.
அதுவும் நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் இந்த பிரச்சனையால், இன்னும் அதிகப்படியான நஷ்டத்தை சந்திக்கக் கூடும் என்றும், இதனால் ஏற்கனவே தொய்வடைந்துள்ள நிலையில் உள்ள பொருளாதாரம், இன்னும் பின்னடைய கூடும், இதனால் இது மிக மோசமான நிலைக்கு செல்லக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
அமெரிக்காவே தள்ளாடுகிறது?
ஆனானப்பட்ட அமெரிக்காவே இந்த வர்த்தகப் பற்றாக்குறையால் தான் திணறி வருகிறது. இப்பிரச்சனையால் தான், கிட்டதட்ட கடந்த ஒரு வருடமாக அமெரிக்கா சீனா இடையே பிரச்சனை வளர்ந்து கொண்டே போகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இப்படி ஒரு பிரச்சனை மிக அமைதியாக ஒரு புறம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பொருளாதாரத்தின் முன்னணி நாடான அமெரிக்காவே இப்பிரச்சனையால் தள்ளாடும் போது, வளர்ந்து வரும் நிலையில் உள்ள இந்தியாவுக்கு, அதுவும் இந்தியா தற்போதுள்ள நிலைக்கு இது மிக பேராபத்தாகவே முடியும் என்றும் கூறப்படுகிறது.
வர்த்தக வித்தியாசம்?
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தக பற்றாக்குறையானது மிக கவலை கொள்ளும் விதமாக அதிகரித்துள்ளது என்றும், இது சுமார் 57 பில்லியன் டாலர் என்றும், இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 40 லட்சம் கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 2018ல் வர்த்தக பற்றாக்குறையானது 51.72 பில்லியன் டாலர்களில் இருந்து, 57.86 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியா தயாரிப்புகளுக்கான நியாயமற்ற சந்தை அணுகல்
இந்தியா - சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் புதுமை உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில், பேசிய இந்தியாவின் வெளி விவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா தயாரிப்புகளுக்கான நியாயமற்ற சந்தை அணுகல் மற்றும் பெய்ஜிங்கின் பாதுகாப்பு வாத கொள்கைகள் குறித்து இந்தியா பெரிதும் கவலை கொண்டுள்ளது என்றும், இரு நாடுகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வர்த்தக பற்றாக்குறை நிலவி வருவதாகவும் கூறியுள்ளார்.
எந்தெந்த துறையில் பிரச்சனை
இந்தியாவின் பல பெரும்பான்மையான தொழில் துறைகளில் சீனாவின் பொருட்கள் நுழைவு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய தொழில் துறையினர் கூறியுள்ளனர். குறிப்பாக பால், உலோகம், எலக்ட்ரானிக்ஸ், ரசாயனங்கள் மற்றும் ஜவுளி உள்ளிட்ட பிரிவுகளில் வரி குறைப்பு விகிதத்திற்கு இந்திய அரசு உட்பட கூடாது என்றும், இத்தொழில் துறையினர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனராம்.
என்னதான் அரசு பலவித பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தாலும், அயல் நாட்டு பொருட்கள் உபயோகிப்பதை தவிர்த்து, உள் நாட்டு பொருட்களை உபயோகித்தாலே இந்த பிரச்சனை தன்னாலே தீரும் என்கிறார்கள் இத்துறை சார்ந்த ஆர்வலர்கள்.