இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சியாலும், வர்த்தகச் சந்தையின் சரிவாலும் கார் மற்றும் பைக் விற்பனை குறைந்து ஆட்டோமொபைல் சந்தை 20 வருடச் சரிவை அடைந்துள்ளது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அடுத்தச் சில மாதங்களுக்கு என்ன செய்தாலும் இத்துறை தற்போது ஏற்பட்டுள்ள சரிவிலிருந்து மீண்டு வர கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை என்பது தான்.
இந்த அளவிற்கு இந்திய ஆட்டோமொபைல் சந்தை உள்ளது.
உற்பத்தி நிறுத்தம்..
ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை சில நாட்களில் தீரும் பிரச்சனை இல்லை என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவில் ஏற்கனவே விற்பனை அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் அனைத்து ஆட்டோமொபைல் உபரி உற்பத்தி வேண்டாம் எனத் திட்டமிட்டுத் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதன் மூலம் பல லட்ச ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர்.
விற்பனையில் மாபெரும் வீழ்ச்சி
ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் கார் விற்பனை அளவு கடந்த ஆண்டை விடவும் 31,6 சதவீதம் வரையில் சரிந்து 196,524 கார்களை மட்டுமே விற்பனையாகியுள்ளது.
பைக் விற்பனையில் 22.24 சதவீத வீழ்ச்சி, மீடியம் மற்றும் ஹெவி வர்த்தக வாகன விற்பனையில் 54.3 சதவீத வீழ்ச்சி, மொத்த வர்த்தக வாகன விற்பனையில் 38.7 சதவீத வீழ்ச்சி பதிவாகி மோசமான விற்பனை அளவை பதிவு செய்துள்ளது.
இதேபோல் நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதத்தில் மட்டும் பயணிகள் வாகன விற்பனை 23.54 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
SIAM அமைப்பு
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டு விற்பனை அளவுகளைக் குறித்து வைக்கப்பட்ட காலமான 1997-98 ஆண்டுத் தரவுகளில் இருந்து இன்றைய காலகட்டம் வரையில் ஒப்பிடுகையில் இந்த ஆகஸ்ட் மாதம் தான் மிகவும் மோசமான அளவீட்டு பதிவாகியுள்ளது.
இந்த நிலை இனிவரும் காலத்திலும் மோசம் அடையும் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜிடிபி
ஆசியாவிலேயே 3வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை மிகவும் முக்கியமான வர்த்தகத் துறை மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கிட்டத்தட்ட இந்தியாவின் 7 சதவீத ஜிடிபி ஆட்டோமொபைல் துறையைச் சார்ந்துள்ளது. இது மட்டுமல்லாமல் இத்துறை பல கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பையும் அளித்து வரும் நிலையில், தற்போது ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள தொய்வு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.