டெல்லி : கடந்த செப்டம்பர் 1 முதல் நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆங்காங்கே கடுபிடியுடன் போலீசார் சோதனையில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.
அதிலும் புதிய மோட்டார் வாகன சட்டப்படி, பல ஆயிரம் ரூபாய் கட்டணத்திற்கு பயந்து, மக்கள் அனைத்து ஆவணங்களையும் தேட தொடங்கியுள்ளனர். அதிலும் படுத்துக் கிடந்த இன்சூரன்ஸ் துறையே இதனால் எழுந்து நின்றுள்ளது என்றே கூறலாம்.
என்னதான் அனைத்து ஆவணங்களையும் கையில் வைத்திருந்தாலும், போலீசாரிடம் ஏதேனும் ஒரு வகையில் மாட்டிக் கொள்ளும் நம் குடிமகன்கள், இதிலிருந்து தப்பிக்க புதுப்புது வழிகளை கையாள்கின்றனர்.
தனித்துவமான கண்டுபிடிப்பு
அந்த வகையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த, வதோதரா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், தனது ஹெல்மெட்டிலேயே அனைத்து ஆவணங்களையும் ஒட்டி வைத்துள்ளார். இது போக்குவரத்து போலீசாரையே மகிழ்வித்துள்ளதாம். ஏனெனில் இதனால் அவர்களின் வேலை சுலபம் அல்லவா. மேலும் இந்த புதிய மோட்டார் விதிகள், நம் மக்களை புதுமையான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கவும் கட்டாயப்படுத்தியுள்ளது என்றும் கூறுகிறார்களாம்.
அப்படி என்னென்ன ஆவணங்கள்?
இன்சூரன்ஸ் ஏஜென்டாக இருக்கும் ராம் ஷா ஒவ்வொரு நாளும் தனது இரு சக்கர வாகனத்தில் தொடர்ந்து பயணம் செய்யக் கூடியவர். இதனால் தினமும் தனது ஆவணங்ளை போலீசாரிடம் எடுத்துக் காண்பித்து, அதற்கு ஒரு நேரம் செலவாகுமே என்று யோசித்தவருக்கு உதயமானது தான் இந்த பகீர் யோசனை. இவர் தனது இரு சக்கர வாகனத்தின் ஆர்.சி, இன்சூரன்ஸ், மற்றும் பியூசி சான்றிதழ் என அனைத்தையும் தனது ஹெல்மெட்டிலேயே ஒட்ட முடிவு செய்தாராம். இதனால் தான் எல்லா ஆவணங்களையும் வைத்துள்ளதோடு, இதை விரைவில் போலீசாரிடம் காண்பிக்க முடியும் என்றும் கூறுகிறாராம்.
நான் வழியில் தொந்தரவு செய்யப்படுவதில்லை
இது குறித்து ராம் ஷா கூறுகையில், என்னிடம் அனைத்து ஆவணங்களும் இருப்பதால் எந்த பயமும் இல்லை என்றும், இதனால் வழியில் நான் எந்த தொந்தரவிற்கும் ஆளாவதில்லை என்றும், தொந்தரவு செய்யப்படுவதும் இல்லை என்றும் கூறுகிறார். இதனால் நான் எந்த அபராதத்தையும் கட்ட தேவையில்லை என்றும் கூறுகிறாராம். அதோடு வரும் நாட்களில் குஜராத் அரசாங்கம் புதிய விதிகளை கடுமையாக அமலாக்கம் செய்யும், அப்போது அபராதங்களையும் விதிக்கும். இதற்காகத் தான் இந்த முன் ஏற்பாடுகள் என்றும் கூறுகிறாராம்.
குஜராத் காவல் துறைக்கே இந்த அபராதம்
சமீபத்தில் குஜராத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் போன் பேசுவது போலவும், ஹெல்மெட் இல்லாமலும் வாகனத்தில் சென்று கொண்டிருப்பது போல படம் ஒன்று வைரலாகியது. இந்த நிலையில் அந்த காவல்துறை அதிகாரியின் வாகன எண்ணை வைத்து, அவருக்கு 1,100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications