டெல்லி : இந்தியர்களின் மிகப்பெரிய கவலையே வேலையின்மை தான். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இவ்வாறு கவலை படுபவர்களில் பெரும்பாலானோர் நாடு சரியான திசையில் செல்கிறது என்று நம்புகிறார்களாம்.
ஆனால் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ் பொது விவகாரங்கள் (ipsos public affair), வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின் படி, கடந்த மூன்று மாதங்களாக இந்தியர்களின் முக்கிய கவலையே வேலையின்மை தான் என்றும் தெரிவித்துள்ளது.
அதிலும் முதல் ஐந்து பிரச்சனைகளில் வேலையின்மையே முதலிடத்திலும், இந்தியா மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும், மக்களின் பெரும்பான்மையான கவலை வேலையின்மையே என்றும் கூறப்படுகிறது.
முதல் ஐந்து கவலைகள்
இந்த ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் முதல் ஐந்து இடங்களில், வேலையின்மை பற்றிய கவலையே அதிகம் இருப்பதாக 46 சதவிகிதம் பேரும், குற்றம் மற்றும் வன்முறை பற்றிய கவலை இருப்பதாக 37 சதவிகிதம் பேரும், இதே நிதி மற்றும் அரசியல் ஊழல் பற்றிய கவலைகள் என 34 சதவிகிதம் பேரும், பயங்கரவாதத்தால் கவலை என்றும் 29 சதவிகிதம் பேரும், இதே வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை பற்றி தான் கவலை என்று 28 சதவிகிதம் பேரும் கவலை அளிப்பதாகவும் இந்த கணக்கெடுப்பில் கூறியுள்ளனராம்.
சரியான திசையில் தான் செல்கிறது
இந்தியா உலகளாவிய போக்கை நம்புகிறது என்றாலும், 73 சதவிகிதம் மக்கள் இந்தியா சரியான பாதையில் தான் செல்கிறது என்றும், இதே உலக அளவில் 58 சதவிகிதம் பேர் தங்களது நாடு தவறான பாதையில் தான் செல்கிறது என்றும் நம்புகிறார்களாம். ஒரு புறம் தங்களது நாடு சரியான திசையில் தான் செல்கிறது என்று இந்தியர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தாலும், அவர்களின் மிகப்பெரிய கவலையே வேலையின்மையாகத் தான் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இது அடுத்த பிரச்சனை
நாட்டின் முதன்மை பிரச்சனையே வேலையின்மை தான் என்றும் நம்பும் மக்கள், இதற்கடுத்து மிகப்பெரிய அளவில் கவலை கொள்ளும் ஒரு விஷயம் குற்றம் மற்றும் வன்முறை என்றும் கூறப்படுகிறது. இதன் கடைசி சுற்று அறிக்கையில், 8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம். எனினும் சில கவலை கொள்ளும் விஷயங்கள் சற்று மாற்றம் அடைந்துள்ளதாகவும், அதில் நிதி மற்றும் அரசியல் ஊழல் 5 சதவிகிதமாக வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இதே பயங்கரவாதம் என்பது 2 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை 1 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், எனினும் இந்த முக்கிய துறைகளில் அரசாங்கத்தின் தலையீடும் கவனமும் தேவை என்றும் இப்சோஸ் இந்தியாவின் தலைவர் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் என்ன நிலை?
இந்தியாவில் தான் இப்படி எனில், சர்வதேச அளவிலும் இதே பிரச்சனை தான். சர்வதேச அளவில் முதல் ஐந்து பிரச்சனைகளை கணக்கிடும் போது வேலையின்மையே முதல் பிரச்சனையாக 32 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். இதே போல் வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை பற்றி 32 சதவிகிதம் பேரும் கவலை அளிப்பதாக கூறியுள்ளனர். மேலும் குற்றம் மற்றும் வறுமை பற்றி 31 சதவிகிதம் பேரும், நிதி மற்றும் அரசியல் பற்றிய கவலைகள் இருப்பதாக 30 சதவிகிதம் பேரும், ஹெல்த்கேர் பற்றிய கவலைகள் தான் அதிகம் இருப்பதாக 26 சதவிகிதம் பேரும், தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
நிறைய பேர் தவறான பாதை
உலகெங்கிலும் உள்ள 27 சந்தைகளில் உள்ளவர்களில், 23 பேர் தாங்கள் தவறான பாதைகளில் இருப்பதாகத் தான் உணர்கிறார்களாம். இதே சீனாவில் 94 சதவிகிதம் பேரும், சவுதி அரேபியா 78 சதவிகிதமும், இந்தியா 73 சதவிகிதமும், மலேசியா 60 சதவிகிதம் பேரும் மிதமான நம்பிக்கையுடனும் இருப்பதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மிகுந்த அவநம்பிக்கை
இதே மிக அவநம்பிக்கையுடன் இருப்பதாக கிரேட் பிரிட்டனில் 78 சதவிகிதமும் பேரும், பிரான்ஸில் 77 சதவிகிதம் பேரும், தென்னாப்பிரிக்காவில் 74 சதவிகிதம் பேரும், பெல்ஜியத்தில் 74 சதவிகிதம் பேரும், ஸ்பெயின் 69 சதவிகிதம் பேரும், ஹங்க்கேரியில் 68 சதவிகிதம் பேரும் தாங்கள் மிக மோசமான அவநம்பிக்கையுடன் இருப்பதாகவும் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த தரவு யாரிடம் வாங்கப்பட்டது?
இந்த கருத்துக் கணிப்பானது 28 நாடுகளில் இருந்து பெறப்பட்டது என்றும், அதிலும் 18 வயதிற்கு மேற்பட்டோரிடம், 19,520 பேரிடம் நேர்காணல் மூலம் பெறப்பட்ட தரவு என்றும் கூறப்படுகிறது.