டெல்லி: கடந்த ஆட்சிக் காலத்தில் தான் மோடி அரசு அரசு வங்கிகளை இணைக்கத் தொடங்கியது. சமீபத்தில் கடந்த ஆகஸ்ட் 30, 2019 அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, மேலும் 10 அரசு வங்கிகளை நான்கு பெரிய அரசு வங்கிகளாக இணைக்கப் போகும் திட்டத்தை பத்திரிகையாளர்களிடம் சொல்லி பகீர் கிளப்பினார். அடுத்த நாளே சென்செக்ஸ் சுமாராக 750 புள்ளிகள் சரிவைக் கண்டது.
இப்போது வங்கி மற்றும் நிதி சார் நிறுவனங்கள் தாண்டி, அரசின் கவனம் மற்ற பொதுத் துறை நிறுவனங்கள் மீதும் கூடி இருக்கிறது. வேறு எதற்கு இணைப்பிற்குத் தான்..!
மின்சாரம்
வங்கிகள் இணைப்பைப் போல, மற்ற அரசு சார் நிறுவனங்கள் பலவற்றை ஒன்றிணைக்கும் திட்டத்தை, மத்திய அரசு ஆழமாக யோசித்து வருகிறதாம். அந்த வரிசையில் இப்போது என் டி பி சி மற்றும் என் ஹெச் பி சி ஆகிய இரண்டு பெரிய மின்சார நிறுவனங்களுடன் இந்தியாவில் இருக்கும் பல்வேறு சிறிய மின்சார நிறுவனங்களை இணைக்க திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கிறார்களாம்.
சின்ன நிறுவனங்கள்
தேக்ரி ஹைட்ரோ டெவலெப்மெண்ட் கார்ப்பரேஷன் என்கிற (உத்திரப் பிரதேச மற்றும் மத்திய அரசின் ஜாயின்ட் வெஞ்சர் நிறுவனம்) மின்சார நிறுவனத்தை என் டி பி சி அல்லது என் ஹெச் பி சி போன்ற பெரிய மின்சார நிறுவனத்துடன் இணைக்கப் போகிறார்களாம். அதே போல நார்த் ஈஸ்டர்ன் எலெக்ட்ரானிக்ஸ் பவர் கார்ப்பரேஷன் போன்ற மற்ற சின்ன சின்ன மின்சார துறை சார் நிறுவனங்களையும் மேலே சொன்ன இரண்டு பெரிய மின்சார நிறுவனங்களுடன் இணைக்கப் போகிறார்களாம்.
கோல் இந்தியா
பொதுத் துறை நிறுவனங்களின் இணைப்பில் கவனம் செலுத்தும் மத்திய அரசு, கோல் இந்தியா விஷயத்தில் மட்டும் ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறது. கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனங்களான ECL, BCCL, CCL, CMPDL, SECL, MCL போன்றவைகளை தாய் நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் உடன் இணைக்கச் சொல்லிக் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள் கோல் இந்தியா நிறுவனத்தின் தொழிலாளர் மற்றும் வர்த்தகச் சங்கங்கள்.
முரண்
ஆனால் மத்திய அரசோ தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத் துறை வங்கிகளை எல்லாம் ஒன்றிணைத்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், கோல் இந்தியா விஷயத்தில் மட்டும் அனைத்து துணை நிறுவனங்களையும் தனித் தனி நிறுவனங்களாக மாற்ற துடித்துக் கொண்டு இருக்கிறதாம். இதை எதிர்த்து கோல் இந்தியா தொழிலாளர் மற்றும் வர்த்தகச் சங்கத்தினர்கள் வரும் செப்டம்பர் கடைசி வாரத்தில் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாகவும் சொல்லி இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications