உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் செப்டம்பர் 10ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 போன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் சந்தை மிகப்பெரிய அளவில் மாறியுள்ள இத்தகைய சூழ்நிலையில் ஆப்பிள் அறிவிப்புகளும், அறிமுகங்களும் மிகவும் முக்கியம்.
ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபோன் 11 மாடல் போன்கள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆப்பிள் மீண்டும் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆப்பிள் 2019
கலிபோர்னியாவில் இருக்கும் ஆப்பிள் தலைமை அலுவலகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர் அரங்கத்தில் நடந்த ஆப்பிள் ஈவென்ட் 2019இல் இந்நிறுவனம் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் ப்ரோ மேக்ஸ், ஆப்பிள் வாட்ஸ் சீரியஸ் 5, ஐபேட் 2019, ஆப்பிள் டிவி பிளஸ் மற்றும் புதிய கேமிங் தளமான ஆப்பிள் பிளாட்பார்ம் ஆகியவற்றை அறிமுகம் செய்தது.
இவை அனைத்தும் ஆப்பிள் பேன்ஸ் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
எதிரொலி
இதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனப் பங்குகள் மீதான முதலீடு தாறுமாறாக அதிகரித்தது. இதன் மூலம் ஓரே நாளில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 11.43 பில்லியன் டாலர் வரையில் அதிகரித்தது. ஒரு பங்கின் விலை ஓரே நாளில் 2 டாலர் வரையில் உயர்ந்து 216.7 டாலருக்கு வர்த்தகமானது.
செப்டம்பர் 9ஆம் தேதி 967.87 பில்லியன் டாலராக இருந்த ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு செப்டம்பர் 10ஆம் தேதி 979.31 பில்லியன் டாலராக உயர்ந்தது.
விற்பனையில் சரிவு
கடந்த சில காலாண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை பெரிய அளவில் குறைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் விலையில் குறைவாகவும், தரத்தில் உயர்வாக வரும் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தான்.
சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தால் ஆப்பிள் மட்டும் அல்லாமல் சாம்சங் நிறுவனத்தின் வர்த்தகமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆப்பிள்-இன் இப்புதிய அறிமுகங்கள் இழந்த சந்தையை மீண்டும் பிடிக்குமா..?