மும்பை: இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஆட்டோமொபைல் நிறுவனத்தைப் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக இடம் பிடித்துக் கொண்டே தான் இருக்கின்றன.
சமீபத்தில் நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ஆட்டோமொபைல் துறையின் சரிவுக்கு இளைஞர்கள் ஓலா உபர் போன்ற டாக்ஸி அக்ரிகேட்டர்களைப் பயன்படுத்துவது தான் காரணம் எனச் சொல்லி டிரெண்டானார்.
ஆனால் இப்போது பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ், ஆட்டோமொபைல் துறையின் சரிவுக்கு ஆட்டோமொபைல் துறை கூடுதலாக உற்பத்தி செய்து தேக்கி வைத்ததே காரணம் எனச் சொல்லி இருக்கிறார்.
பஜாஜ் அதிரடி
சில வாரங்களுக்கு முன்பு தான் "ஊழியர்கள் வாழ்க்கையோடு விளையாடுவது நியாயமா..?" என வேலை பறிப்பு குறித்து, தன் சக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களைப் பார்த்து கேள்வி எழுப்பி இந்தியா முழுக்க டிரெண்டானார். அதே போல இந்த முறையும் இந்திய ஆட்டோமொபைல் துறையின் இந்த கடுமையான விற்பனை சரிவுக்கு, இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தான் காரணம் என சேம் சைட் கோல் போட்டு இருக்கிறார்.
பொருளாதார மந்த நிலை
அதோடு நிறுத்தி இருந்தால் கூட பரவாயில்லை. கடந்த ஜூலை 2019 மற்றும் ஆகஸ்ட் 2019-ல், இந்திய ஆட்டோமொபைல் துறையின் உற்பத்தி சுமார் 30 சதவிகிதம் வரை விற்பனை சரிந்து இருக்கிறது. இதில் 5 - 7 சதவிகித விற்பனை சரிவு வரை தான் இந்திய பொருளாதார மந்த நிலை காரணமாக இருக்கும். இந்த பொருளாதார மந்த நிலையை நிறுவனங்கள் கட்டுப்படுத்த முடியாது தான். ஆனால் மீதமுள்ள 23 - 25 சதவிகிதம் வரையான விற்பனை சரிவுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூடுதல் உற்பத்தி செய்தது தான் காரணம் என வெளுத்து வாங்கி இருக்கிறார்.
தொடர் வளர்ச்சியா..?
தற்போது இந்திய ஆட்டோமொபைல் துறை, பாரத் ஸ்டேஜ் 6 ரக வாகனங்களுக்கு தகுந்தாற் போல, தன் கையிருப்பு சரக்குகளை சரி செய்து கொண்டு இருக்கிறது. இந்த வேலை வரும் நவம்பர் 2019-க்குள் சரியாகிவிடும். எந்த ஒரு துறையும் தொடர்ந்து வளர்ச்சி காணாது. அவ்வப்போது ஒரு சின்ன கரெக்ஷன் வரத் தான் செய்யும். அந்த கரெக்ஷன் காலம் 1 - 2 ஆண்டுகளாக இருக்கலாம் எனச் சொல்லி, சக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறார்.
ஜிஎஸ்டி
வரும் செப்டம்பர் 20, 2019 அன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் ஜிஎஸ்டி தொடர்பாகவும் ஒரு குண்டைப் போட்டு இருக்கிறார் பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ். ஜிஎஸ்டி கவுன்சிலே ஆட்டோமொபைல் மீதான வரியை குறைக்க யோசித்துக் கொண்டு இருக்கும் போது, இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களை எல்லாம் கூட குறைக்க வேண்டாம். 28%-ஆகவே இருக்கட்டும் எனச் சொல்லி இருக்கிறார். அப்படி குறைப்பதினால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் எனவும் சொல்லி இருக்கிறார் ராஜிவ் பஜாஜ்.
டீலர்கள்
ஒருவேளை ஜிஎஸ்டி வரி குறைத்தால், ஏற்கனவே 28% ஜிஎஸ்டி வரி செலுத்தி வாகனங்களை வாங்கிய டீலர்கள், குறைந்த ஜிஎஸ்டி வரி (18%) விகிதங்களுக்கு தான் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை விற்க வேண்டி இருக்கும். இதனால் டீலர்கள் தங்கள் கை காசைப் போட்டு வாங்கிய வாகனங்களுக்கு சுமார் 10% நஷ்டம் காண வேண்டி இருக்கும். எனவே தற்போதைக்கு 28% ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு மாற்ற வேண்டாம். வேண்டுமானால் பாரத் ஸ்டேஜ் 6 ரக வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்.