மும்பை: வருமான வரித் துறையினருக்கு கிடைத்த தகவல்கள் படி அதிரடியாக ஒரு பெரிய காரியத்தைச் செய்து இருக்கிறார்கள். அதுவும் இந்தியாவின் பணக்கார குடும்பங்களில் ஒன்றான அம்பானி குடும்பத்தை எதிர்த்துச் செய்து இருக்கிறார்கள்.
இந்த பணக்கார குடும்பங்கள் தான் ஆளும் அரசியல் வர்கத்துக்கும் சரி, ஆட்சியை நடத்தும் அதிகார வர்கத்துக்கும் சரி, மிக நெருக்கமாக இருப்பார்கள். நாளை நம் நாட்டில் என்ன நடக்கும் என்கிற விஷயம் அவர்களுக்கு இன்றே தெரிந்து விடும்.
அரசின் கொள்கைகள், முடிவுகள் மற்றும் எதிர்காலத்தில் வரும் உத்தரவுகளைக் கூட இந்த பணக்கார குடும்பங்கள் நினைத்தால் மாற்றி அமைக்க முடியும். மாற்றி அமைத்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட குடும்பங்களில் ஒன்று தான் அம்பானி குடும்பம்.
நோட்டீஸ்
முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் வாரிசுகளான ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோர்களுக்கும் வருமான வரித் துறை அதிகாரிகள் 2015 கறுப்புப் பணச் சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 28, 2019 அன்று நோட்டீஸ் வழங்கி இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த நோட்டீஸ் அம்பானி குடும்பத்தினருக்கு வரவே இல்லை என ரிலையன்ஸ் குழுமத்தின் சார்பாகச் சொல்லி இருக்கிறார்கள்.
எந்த சட்டத்தின் கீழ்
வருமான வரித் துறையினர், 2015 கறுப்புப் பணச் சட்டம் பிரிவு 10 உட்பிரிவு (I)-ன் கீழ் அம்பானி குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்களாம். மும்பை வருமான வரித் துறையின் கூடுதல் ஆணையர் 3 (3) தான் அம்பானி குடும்பத்தினருக்கு வருமான வரி நோட்டீஸ் வழங்கி இருக்கிறதாம். ஆக வெளிநாடுகளில் இருக்கும் சொத்து பத்துக்களை அம்பானி குடும்பத்தினர்கள் வருமான வரித் துறையிடம் முறையாகச் சொல்லவில்லை என்பது தான் முதல் குற்றம். வெளிநாட்டு சொத்து பத்துக்களை வருமான வரிப் படிவத்தில் குறிப்பிடாதது மிகப் பெரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன சொத்து பத்து
2011- 12 கால கட்டத்தில், ஹெச்எஸ்பிசி ஜெனிவா வங்கியில் கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் 1,100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விவரம் கிடைத்த பின் தான், வருமான வரித் துறையினர் செயலில் இறங்கத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த விவரங்கள் வெளியான போது தான் ரிலையன்ஸ் குழுமம் சுமார் 14 நிறுவனங்கள் பெயரில் சுமார் 600 மில்லியன் டாலர் தொகையை பதுக்கி வைத்திருக்கும் விஷயமும் வெளியானது.
லாபம் இவர்களுக்கு
இந்த 14 ரிலையன்ஸ் நிறுவனங்களின் வழியாக யார் லாபம் அடையப் போகிறார்கள்..? என வருமான வரித் துறை விசாரித்த போது முகேஷ் அம்பானியின் மனைவி, மகன்கள் மற்றும் மகள் தான் என்கிற விஷயமும் தெரிய வந்தது. இந்த விவரம் கிடைத்த உடன் மும்பை அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் மூத்த அதிகாரிகளிடம் ஆலோசித்து இருக்கிறார்கள். தீர விசாரித்த பின் தான் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்களாம்.
பதுக்கல் 1
அப்படி அம்பானி குடும்பத்தினர்கள் என்ன பெரிய தவறு செய்துவிட்டார்கள் எனக் கேட்கிறீர்களா..? நவம்பர் 05, 2003 காலத்தில் Capital Investment Trust என்கிற அமைப்பு சி ஜே தமானி என்பவருடன் சேர்ந்து உருவாக்கப்படுகிறது. இந்த ட்ரஸ்டுக்கு முதல் முதலீடு வெறும் 1,000 டாலர் தானாம். அதன் பிறகு நிறைய பணம் ரிலையன்ஸ் தரப்பில் இருந்து வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
பதுக்கல் 1 தொடர்ச்சி
1. இந்த Capital Investment Trust என்கிற அமைப்பு Thames Global Limited என்கிற நிறுவனத்துக்கு உரிமையாளராக இருக்கிறது.
2. இந்த Thames Global Limited என்கிற நிறுவனம் Infrastructure Company Limited மற்றும் Antalis Management Limited போன்ற நிறுவனங்களின் உரிமையாளராக இருக்கிறது.
3. இப்படி ஒரு பெரிய சங்கிலித் தொடராக ஒரு நிறுவனத்தின் கீழ் இன்னொரு நிறுவனம், அதன் கீழ் இன்னொரு நிறுவனம் என தொடர்கிறது.
இதில் அம்பானி குடும்பத்தினர் செய்திருக்கும் முதலீடுகள், வைத்திருக்கும் சொத்து விவரங்களை வருமன வரித் துறையினரிடம் சொல்லவில்லை. இந்த சங்கிலித் தொடரில் சில பல மில்லியன் சொத்துக்கள் வைத்திருக்கிறார்களாம்.
பதுக்கல் 2
கேமன் தீவுகளில் இருக்கும் Infrastructure Company Limited நிறுவனம், கடந்த பிப்ரவரி 09, 2004-ல் சுமார் 400 மில்லியன் டாலர் தொகையை, ரிலையன்ஸ் போர்ட்ஸ் & டெர்மினல் (RPTL) நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் யுடிலிட்டீஸ் & பவர் (RUPL) ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. ஆனால் ரிலையன்ஸ் போர்ட்ஸ் & டெர்மினல் (RPTL) மற்றும் ரிலையன்ஸ் யுடிலிட்டீஸ் & பவர் (RUPL) ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்து இருப்பவர்கள் பட்டியலில் கேமன் தீவுகளில் இருக்கும் Infrastructure Company Limited-ன் பெயர் வரவில்லை.
பதுக்கல் 2 தொடர்ச்சி
அதெப்படி முதலீட்டாளர்கள் பெயர் இல்லாமல் எனப் பார்த்தால்... இந்த 400 மில்லியன் அமெரிக்க டாலர் ரிலையன்ஸ் குழுமத்தின் தாய் நிறுவனமான RIHPL (Reliance Industries Holding Pvt Ltd)-ன் கைக்குத் தான் திரும்ப சென்று சேர்ந்து இருக்கிறது. இந்த RIHPL (Reliance Industries Holding Pvt Ltd) நிறுவனம் வழியாக லாபம் அடைந்தவர்கள் சாட்சாத் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் அவரின் மூன்று குழந்தைகள் தான்.
பதுக்கல் 3
2002 - 03 கால கட்டத்தில் RIHPL (Reliance Industries Holding Pvt Ltd)-க்கு வந்து சேர வேண்டிய பணம் (ஜிடிஆர்), ஒன்றன் பின் ஒன்றாக பல நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு (Transfer), சில நிறுவனங்கள் சேர்க்கப்பட்டு (Merger), சில நிறுவனங்கள் வேறு சில நிறுவனங்களாக தனியாக பிரிக்கப்பட்டு (கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா..? அதற்குத் தானே இத்தனையும் செய்திருக்கிறார்கள்) பணம், பேங்க் ஆஃப் நியூயார்க் மெலன் (The Bank of New york Mellon) வழியாகத் தான் வந்து இருக்கிறது.
பதுக்கல் 3 தொடர்ச்சி
பேங்க் ஆஃப் நியூயார்க் மெலன் தரப்பிலோ, ரிலையன்ஸ் குழுமத்தின் பணத்தை (ஜிடிஆர்) வைத்திருந்தது தாங்கள் தான், ஆனால் அந்த பணம் தங்களுடையது இல்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ரிலையன்ஸ் குழுமத்தின் பணத்துக்கு யார் உண்மையான உரிமையாளர் என்பதை ரிலையன்ஸ் நிறுவனம் வேண்டும் என்றே மறைத்து இருக்கிறது. பேங்க் ஆஃப் நியூயார்க் மெலன் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பணத்தை பதுக்கி இருக்கிறார்கள். இப்படித் தான் பல மில்லியன் டாலர் கறுப்புப் பணத்தை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பதுக்கி வைத்து இருப்பதாகச் சொல்லி நோட்டீஸ் வழங்கி இருக்கிறது வருமான வரித் துறை