மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டு இருக்கிறார். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 23, 2019 மற்றும் ஆகஸ்ட் 30, 2019 ஆகிய தேதிகளில் நிதி அமைச்சர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பிலேயே வரும் 19 செப்டம்பர் 2019 அன்று அரசு பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
உலக அளவில் பணவீக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்து வரும் போது, இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணவீக்கம் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார்.
தொழிற்துறை உற்பத்தி
அதே போல இந்தியாவின் தொழிற் துறை உற்பத்தியும் கடந்த மூன்று காலாண்டுகளாக வளர்ந்து வருகிறது. கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் முதல் காலாண்டு மற்றும் இரண்டாவது காலாண்டுக்குப் பிறகு தொடர்ந்து இறக்கம் கண்டு வருகிறது. ஆனால் கடந்த 2018 - 19 நான்காவது காலாண்டு தொடங்கி, கடந்த ஜூலை 2019 வரை தொடர்ந்து இந்திய தொழிற்துறை வளர்ச்சிக் கண்டு வருகிறது எனச் சொல்கிறார் அமைச்சர்.
கேள்வி
இங்கு தான் ஒரு கேள்வியே எழுகிறது. கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் முதல் காலாண்டு உடன் ஜூலை 2019-ஐ மட்டும் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியா..? இதை ஏன் மாதாந்திர சார்ட்டாக போட்டு இருக்கக் கூடாது. ஆனால் நம் நிர்மலா சீதாராமனோ 2019 - 20 நிதி ஆண்டில் ஒரு காலாண்டையும் ஜூலை 2019-ஐயும் ஒப்பிட்டு இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக மீண்டு வந்து கொண்டு இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார்.
8 துறைகள்
அதே போல இந்தியாவின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி பற்றி பேசாமல் நழுவி இருக்கிறார். நிதி அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் முக்கிய எட்டு துறைகள் சார்ட்டில். கடந்த ஐந்து ஆண்டுகளில் சிமெண்ட் துறை ஒரு பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. 2018 - 19 முதல் காலாண்டில் சுமாராக 16 சதவிகிதமாக இருந்த சிமெண்டின் வளர்ச்சி, கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 2 சதவிகிதத்துக்குள் கீழ் தான் வளர்ச்சி கண்டது. இதை நம் நிர்மலா சீதாராமன் விளக்கவே இல்லை.
பாராட்டு
அதே கால கட்டத்தில் ஸ்டீல் துறை கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் முதல் காலாண்டு தொடங்கி 2019 - 20 நிதி ஆண்டில் முதல் காலாண்டு வரை தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டு வருவது பாராட்டுக்குரியது. இப்படி ஸ்டீல் மற்றும் சிமெண்ட் மட்டும் போட்டு காட்டுவதற்கு பதிலாக முக்கிய எட்டு துறைகளையும் சார்ட்டில் காட்டி இருக்கலாமே என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை.
சரிவு
ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது தொழிற்துறை மெல்ல சரிவைக் கண்டு வருகிறது. இதையும் நிர்மலா சீதாராமன் விளக்கவே இல்லை. உதாரணமாக கடந்த ஜூலை 2018-ல் எட்டு துறைகளில் ஒட்டு மொத்த வளர்ச்சி 7.3 சதவிகிதமாக இருந்தது. ஜூலை 2018-க்குப் பிறகு, இப்போது வரை இந்த 7.3 சதவிகித வளர்ச்சியைக் கானவில்லை. மிகக் குறைந்த பட்சமாக ஜூன் 2019-ல் இந்த முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 0.7 சதவிகிதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.