மொத்த பணவீக்கக் குறியீடு (Wholesale Price Index) என்றால் என்ன..? ஒரு மொத்த விலைச் சந்தையில் (Wholesale Market)-ல் ஒரு பொருளை வாங்கினால் ஒரு குறிப்பிட்ட விலைக்கு கொடுப்பார்கள்தானே.
அந்த விலை மாற்றம் தான் இந்த மொத்த பணவீக்கக் குறியீடு. அப்படி இந்தியாவின் மொத்த விலைச் சந்தையில் என்ன பொருட்கள் என்ன விலை மாற்றங்களுடன் விற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்.
மொத்த பணவீக்கக் குறியீடு கடந்த ஜூலை 2019 போலவே இந்த ஆகஸ்ட் 2019-லும் 1.08 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2018-ல் இந்த மொத்த பணவீக்கக் குறியீடு 4.62 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருட்கள்
உணவுப் பொருட்களின் விலை கடந்த ஆகஸ்ட் 2018-ஐ விட 7.67 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. ஒரு உதாரணத்துக்கு, கடந்த ஆகஸ்ட் 2018-ல் 100 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருந்த உணவுப் பொருட்களின் விலை, இந்த ஆகஸ்ட் 2019-ல் 107.67 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. சரி இருப்பதிலேயே அதிமாக விலை உயர்ந்த, மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றிப் பார்ப்போம்.
மல்லிப் பூ
சாதாரண மக்கள் தொடங்கி பெரிய பணக்காரர்கள் வரை, சாமிக்கு போடுவது தொடங்கி விசேஷங்களில் கொடுப்பது வரை அதிகம் பயன்படுத்தும் மல்லிகைப் பூ, அதிக விலை ஏற்றம் கண்டு இருக்கிறதாம். உதாரணமாக ஆகஸ்ட் 2018-ல் 1 கிலோ 100 ரூபாய் விற்றுக் கொண்டு இருந்த பூவின் விலை, தற்போது ஆகஸ்ட் 2019-ல் 107 சதவிகிதம் அதிகரித்து 207 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறதாம். இனி தான் திருவிழா காலமே தொடங்க இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் அடுத்து தங்கம் விற்று தான் மல்லிப் பூ வாங்க வேண்டி இருக்கும் போலிருக்கிறது.
பூண்டு
அதே போல ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும், பூண்டின் விலை கூட 104 % அதிகரித்து இருக்கிறதாம். உதாரணமாக, ஆகஸ்ட் 2018-ல் கிலோ பூண்டு 100 ரூபாய் விற்றுக் கொண்டு இருந்த பூண்டின் விலை, தற்போது 104 சதவிகிதம் அதிகரித்து 204 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறதாம். பூண்டைத் தொடர்ந்து இஞ்சியின் விலையும் விண்ணைத் தொட்டு இருக்கிறது போல. எடுத்துக்காட்டாக ஆகஸ்ட் 2018-ல் ஒரு கிலோ இஞ்சி 100 ரூபாய்க்கு விற்றுக் கொண்டு இருந்தது. இப்போது ஆகஸ்ட் 2019-ல் அதே ஒரு கிலோ இஞ்சியின் விலை தற்போது 103 சதவிகிதம் அதிகரித்து 203 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறதாம்.
தக்காளி
சரி காய்கறியில் எந்த காய்க்கு அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறோம் எனப் பார்த்தால், வழக்கம் போல நம் தக்காளி தான். கடந்த ஆகஸ்ட் 2018-ல் 1 கிலோ தக்காளிக்கு 100 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். கடந்த 12 மாதங்களில் 57 % விலை அதிகரித்து, தற்போது ஆகஸ்ட் 2019-ல் 157 ரூபாய்க்கு அதே ஒரு கிலோ தக்காளியை வாங்கிக் கொண்டு இருக்கிறோம் என்கிறது மத்திய அரசின் வணிக அமைச்சகம்.
மற்ற பொருட்கள்
இப்படியாக எலுமிச்சைக்கு 75 %, முள்ளங்கிக்கு முழுவதுமாக 40 %, முருங்கைக் காய்க்கு 38 %, வெங்காயத்துக்கு 33 %, சப்போட்டாவுக்கு 22 %, பப்பாளிக்கு 21 %, கொத்தமல்லிக்கு 18 %, வெற்றிலைக்கு 17 %, சிக்கனுக்கு 17 %, பீஃப் இறைச்சிக்கு 10 % என மக்கள் வாங்கும் பொருட்களுக்கு விலை ஏறி இருக்கிறதாம். ஏற்கனவே இந்தியப் பொருளாதார மந்த நிலையில் இருக்கும் போது பணவீக்கம் இத்தனை குறைவாக 1.08 சதவிகிதமாக இருப்பது பொருளாதாரத்துக்கு நல்லதல்ல எனச் சொல்கிறார்கள். ஆனால் நமக்கு விலை ஏற்றம் கொஞ்சம் பெரிதாகத் தான் தெரிகிறது.