சமீபத்தில் சவுதி அரேபியாவின் சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலினால் உலகத்தின் மொத்த கச்சா எண்ணெய் சப்ளையில் சுமார் 5 % குறைந்ததாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இப்படி உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் வரத்து குறைந்து இருப்பதால், உலக நாடுகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பொதுவாக பயன்படுத்தும் பெட்ரோல் டீசல் மற்றும் கச்சா எண்ணெய்யில் இருந்து கிடைக்கும் அனைத்து வகை எரிபொருளின் விலையும் உயர்ந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சவுதி அரேபியா எண்ணெய் நிறுவனத்தில் நடந்த தாக்குதலினால், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசலின் விலை சுமார் இரண்டு ரூபாய் ஐம்பது பைசா வரை உயர்ந்து இருப்பதையும் செய்திகளில் பார்க்க முடிகிறது.
இப்படி இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் தொடங்கி கனரக வாகனங்கள் வரை பயன்படுத்தும் எரிபொருளின் விலை உயர்ந்ததற்கு நாம் எத்தனை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மை விட இந்தியாவில் இருக்கும் விமான நிறுவனங்கள் அதிகமாக வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.
நமக்கு இருக்கும் பிரச்னைக்கு மத்தியில், இந்தியாவில் இயங்கும் விமான நிறுவனங்களை பற்றி கவலைப்படவோ, என்ன பிரச்னை எனக் கேட்கவோ நேரமில்லை தான். ஆனால் வரும் செய்திகளைப் பார்த்தால் அவர்களை நினைத்து கவலைப்பட நமக்கு ஒரு நிமிடமாவது அவகாசம் கிடைக்கும் போலிருக்கிறது. காரணம் விமான எரிபொருளின் விலை ஏற்றம்.
ஏற்கனவே இந்தியாவில் இயங்கும் விமான நிறுவனங்கள் நிதிப் பற்றாக் குறையினால் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு ஏர்இந்தியா நிறுவனம் தொடங்கி சமீபத்தில் மூடுவிழா நடத்திய ஜெட் ஏர்வேஸ் வரை ஆகச் சிறந்த உதாரணங்கள். சமீபத்தில் அரசின் ஏர் இந்தியாவுக்கு விமான எரிபொருள் தர முடியாது எனச் சொன்னார்கள் எண்ணெய் நிறுவனங்கள். அந்த அளவுக்கு விமான சேவை நிறுவனங்களுக்கு விமான எரிபொருள் மிகப் பெரிய அத்தியாவசிய செலவினம்.
இந்த நேரம் பார்த்து திடீரென மீண்டும் விமான எரிபொருளின் விலை ஏறினால் என்ன செய்வார்கள்..? கூடுதல் விலைக்கு தானே பயணச் சீட்டுகளை விற்பார்கள். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் விமான பயணச் சீட்டுகளின் விலை சுமார் 8 முதல் 10 சதவிகிதம் வரை உயர்ந்திருக்கிறதாம். இப்போது கச்சா எண்ணெயின் விலை உயர்வால் விமான எரி பொருளின் விலையும் உயரும். எனவே இனி விமான பயணச் சீட்டுகளின் விலையும் உயர பெரிய வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள் துறைசார் வல்லுனர்கள்.