டெல்லி : இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவை கண்டுள்ள நிலையில் இது ஒரு புறம் இருக்க, கடந்த வாரத்தில் கண்ட லாபம் எல்லாம், கடந்த இரண்டு நாட்களில் போச்சே என்று முதலீட்டாளர்கள் கதறல் மறுபுறம்.
அதிலும் கடந்த செவ்வாய்கிழமையன்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 642 புள்ளிகள் வீழ்ச்சி கண்டும், இதே நிஃப்டி 185 புள்ளிகள் வீழ்ச்சி கண்டும் முடிவடைந்தது.
இத்தகைய ஏற்றம் இறக்கம் எப்போதும் இருப்பது தான் என்றாலும், கடந்த இரண்டு நாட்டுகளில் மட்டும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளில் ரூ.2.72 லட்சம் கோடிகளை இழந்துள்ளனர்.
2 நாளில் ரூ.2.72 லட்சம் கோடி
இதற்கு முக்கிய காரணம் சவுதி அரேபியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையும், அங்கு தாக்குதல் நடத்தப்பட்டதால் பாதியாக குறைந்துள்ள கச்சா எண்ணெய் உற்பத்தியும், மேலும் சரிவைக் காண வழி வகுத்தன. எனினும் இப்பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருவதையடுத்து, இந்திய சந்தைகள் தட்டு தடுமாறிக் கொண்டிருக்கின்றன என்றே கூறலாம். அதிலும் பி.எஸ்.இயில் பட்டியிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 2.72 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளன.
தொடர் வீழ்ச்சியால் நஷ்டம்
பி.எஸ்.இயில் பட்டியிடப்பட்டுள்ள இந்த நிறுவனங்களின் இழப்பு 2,72,593.54 கோடி குறைந்து, 1,39,70,356.22 கோடியாக உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த திங்கட்கிழமையன்று 262 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சந்தை, செவ்வாய் கிழமையன்று 642 புள்ளிகள் வீழ்ச்சி கண்டும் காணப்பட்டது. இதனாலேயே அதிகளவிலான நஷ்டத்தை நிறுவனங்கள் கண்டுள்ளன. இதே என்.எஸ்.இயில் உள்ள அனைத்து துறை குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்பட்டன. அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறை அதிகபட்சமாக 3.8%, ரியால்டி செக்டார் 3.7% மற்றும் பொதுத்துறை வங்கி குறியீடுகள் 3.6%, இதே மெட்டல் 2.6% வீழ்ச்சி கண்டும் காணப்பட்டது.
நிறுவனங்களை மூட திட்டமிடல்
இதில் வங்கி பங்குகள் பெரும்பாலும் இழப்பையே கண்டன. குறிப்பாக ஆக்ஸிஸ் வங்கி 4.6%, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 3.7%, இதே இன்டஸ்இந்த் வங்கி 3% சரிவையும் சந்தித்தன. விரைவில் அரசுக்கு சொந்தமான சில வர்த்தக நிறுவனங்களை அரசு மூட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார் மத்திய வர்த்தக துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சரான பியூஷ் கோயல். இதையடுத்து ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் (State Trading Corporation) நிறுவனத்தின் பங்கு விலை 19.6%, புராஜெக்ட் மற்றும் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் (Project and Equipment Corporation), மெட்டல்ஸ் & மினரல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் (Metals & Minerals Trading Corporation) பங்கின் விலை 16.5% வீழ்ச்சி கண்டும் காணப்பட்டது.
ஏன் இந்த சரிவு
சரி சந்தை ஏன் இந்தளவுக்கு சரிந்தது என்று கேட்கிறீர்களா? இதற்கான முக்கிய காரணங்களில் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ஒன்று. 10 ஆளில்லா விமானம் மூலம் சவுதி அராம்கோவின் எண்ணெய் கிணறுகள் தாக்கப்பட்டதையடுத்து, அங்கு எண்ணெய் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு நிலைமை சீரடைய இன்னும் 5 நாட்கள் ஆகலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் இந்திய எண்ணெய் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கும் சவுதியில் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டிருப்பதால், இந்தியாவிலும் இதன் எதிரொலி காணப்படுகிறது.
ரூபாய் வீழ்ச்சியும் ஒரு காரணம்
சவுதியில் நடத்தப்பட்ட தக்குதலால் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது. இந்த நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பும் 72 ரூபாய் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் அதிகளவிலான முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர். குறிப்பாக அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேற்றத்தினாலேயே இந்த வீழ்ச்சி என்றும் கருதப்படுகிறது.
வங்கி மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் வீழ்ச்சி
ஏற்கனவே வீழ்ச்சி கண்டு காணப்படும் ஆட்டோமொபைல் துறை, இனியாவது ஏற்றம் காணும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் ரூபாயின் சரிவால், இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்கும். குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் உதிரி பாகங்கள் விலை அதிகரிக்கும். இதனால் வாகனங்கள் உற்பத்தி விலையை இது உயர்த்தக் கூடும் என்றும், இதனால் விற்பனை பாதிக்கும் என்பதால் இத்துறையை சார்ந்த பங்குகள் வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் வரவிருக்கும் ஜி.எஸ்.டி தொடர்பான கூட்டத்தில், ஜி.எஸ்.டி சலுகைகள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்புகள் மேலும் சரிவை தூண்டின.
எந்தெந்த பங்குகள் வீழ்ச்சி?
குறிப்பாக ஹீரோ மோட்டோ கார்ப் 6.2% வீழ்ச்சியுடனும், டாடா மோட்டார்ஸ் 4.9% வீழ்ச்சியுடனும், மாருதி 4.65%, ஈச்சர் மோட்டார் 3.3%, பஜாஜ் ஆட்டோ 3%, உள்ளிட்ட பங்குகள், இதே ஆக்ஸிஸ் வங்கி 4.6%, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 3.7% உள்ளிட்ட பலத்த சரிவை சந்தித்ததோடு, வர்த்தகதுறை அமைச்சரின் அறிவிப்பால், ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்கு விலை 19.6%, புராஜெக்ட் மற்றும் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன், மெட்டல்ஸ் & மினரல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் பங்கின் விலை 16.5% வீழ்ச்சி கண்டுள்ளது.
சந்தை சரிவுக்கு இதுவும் ஒரு காரணம்
இந்திய சந்தைகள் சரிந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், அன்னிய முதலீட்டாளர்களின் கவனம் அமெரிக்கா டாலரின் பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக வரவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் கட்டாயம் வட்டி குறைப்பு இருக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பினால், முதலீட்டாளர்களின் கவனம் அங்கு திரும்பியுள்ளதும் இந்த சரிவுக்கு ஒரு காரணம் என்றே கூறலாம்.