இந்திய டெலிகாம் சந்தையில் 2016ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோவால் துவங்கிய வர்த்தகப் போட்டி இன்றும் நிறைவடையவில்லை.
இன்றும் ஜியோவின் மலிவான சேவைகள் இந்தியாவில் 2ஆம், 3ஆம், 4ஆம் தர நகரங்களில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சொல்லப்போனால் ஜியோ இல்லையெனில் இப்பகுதிகளில் தினசரி வாழ்க்கை இயங்காது போன்ற நிலை உருவாகியுள்ளது, இதற்குக் காரணம் ஜியோவின் இண்டர்நெட் சேவை.
இதனால் ஜியோ நிறுவனத்தில் இன்றும் புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்து வருகிறது.
ஜூலை
டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் ஜூலை மாதத்திற்கான நிறுவன வாரியாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அறிவித்துள்ளது.
இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் மட்டும் ஜூலை மாதத்தில் புதிதாக 85.39 லட்ச வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். இதுவே பார்தி ஏர்டெல், ஐடியா-வோடபோன் நிறுவனங்கள் 60 லட்ச வாடிக்கையாளர்களை இக்காலகட்டத்தில் இழந்துள்ளது.
மொத்த வாடிக்கையாளர்கள்
இதன் மூலம் ஜூலை மாத முடிவில் இந்தியாவில் மொபைல் மற்றும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 118.9 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மாதம் 0.2 சதவீத வளர்ச்சி அடைந்து வருவது. இதில் ஜியோ நிறுவனம் மட்டும் ஜூலை மாதத்தில் இணைந்த 85.39 லட்ச வாடிக்கையாளர்கள் மூலம் மொத்தம் 33.97 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
மேலும் வோடபோன்-ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
ஏர்டெல்
ஜூலை மாத தரவுகள் படி பார்தி ஏர்டெல் நிறுவனம் வாங்கி டாடா டெலிசர்வீசஸ் உடன் சேர்த்து 25.8 லட்ச வாடிக்கையாளர்களை இழந்து 32.85 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு வர்த்தகம் செய்து வருவதாக டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.
ஐடியா - வோடபோன்
ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ஐடியா-வோடபோன் கூட்டணி ஜூலை மாதத்தில் 33.9 லட்ச வாடிக்கையாளர்களை இழந்து 38 கோடி வாடிக்கையாளர்களுடன் வர்த்தகம் செய்து வருகிறது.
இதன் மூலம் அதிக வாடிக்கையாளர் எண்ணிக்கை படி ஐடியா - வோடபோன் முதலிடத்திலும், ரிலையன்ஸ் ஜியோ 2வது இடத்தையும் பெற்றுள்ளது. 3வது இடத்தில் பார்தி ஏர்டெல் இருப்பது குறிப்பிடத்தக்கது.