இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும், வர்த்தக வளர்ச்சியும் மோசமான நிலையில் இருக்கிறது, இதற்கு அரசின் தவறான முடிவுகளும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவதால் அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த 4 மாதங்களாகத் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் கடந்த 9 மாதமாக ஏற்பட்ட வர்த்தக வளர்ச்சி அனைத்தும் சரிந்து திரும்பவும் 2019 ஜனவரி 1ஆம் தேதி நிலவரத்திற்கே வந்துள்ளது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர்.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
புதன்கிழமை நிஃப்டி வர்த்தகத்தில் நிப்டி குறியீடு தொடர் அன்னிய முதலீடு வெளியேற்றத்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் அதிகப்படியான தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் மீதான முதலீட்டுக் காரணமாகவும் 9 மாத வளர்ச்சியை இழந்து மீண்டும் பழைய நிலைமைக்கே வந்துள்ளது.
ஜனவரி 1ஆம் தேதி நிஃப்டி குறியீடு 10,872.80 புள்ளிகளில் இருந்ததைப் போலவே புதன் கிழமை வர்த்தகத்தில் நிஃப்டி 10,848.65 புள்ளிகளை அடைந்திருந்தது. இதேபோல் சென்செக்ஸ் குறியீடும் ஜனவரி 1ஆம் தேதி நிலவரமான 36,563 புள்ளிகளின் நிலையை 17ஆம் தேதியே அடைந்து விட்டது.
இதன் மூலம் நமக்குத் தெரிவது என்னவென்றால் பங்குச்சந்தையில் கடந்த 9 மாதத்தில் வளர்ச்சி பூஜ்ஜியம். முதலிட்டாளர்களின் பணம்.. கேள்விக்குறிதான்..?
கச்சா எண்ணெய் பிரச்சனை
சவுதி - ஈரான் எல்லையில் இருக்கும் சவுதி நாட்டின் கச்சா எண்ணெய் ஆலையில் டிரான் தாக்குதல் நடந்தது எல்லோருக்கும் தெரியும். இந்தத் தாக்குதலின் வாயிலாகக் கடந்த 4 நாட்களாகக் கச்சா எண்ணெய் மீதான முதலீடு தாறுமாறாக அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை தாக்குதல் நடந்த தினத்தில் 60 டாலரில் இருந்து 68 டாலர் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதேபோல் WTI கச்சா எண்ணெய் 54.84 டாலரில் இருந்து 61.40 டாலருக்கு உயர்ந்து அசத்தியுள்ளது.
இந்தியாவிற்கு ஆபத்து
இந்தத் திடீர் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், சவுதியில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் இந்தியாவிற்குக் கிடைக்கும் கச்சா எண்ணெய் அளவுகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சவுதி ஆராம்கோ கச்சா எண்ணெய் விநியோகத்தில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது என அறிவித்தது மட்டும் அல்லாமல் விபத்தில் இருந்து உடனடியாக மீண்டு வந்துள்ளோம், அடுத்த ஒரு வாரத்திற்குள் உற்பத்தியின் முழு அளவை அடைவோம் எனத் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆராம்கோவின் துரித நடவடிக்கையால் இந்தியாவில் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் இருக்காது எனத் தெரிகிறது.
தங்கம்
ஏற்கனவே பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடுகள் அனைத்தும் தங்கம் மீது செய்யப்பட்டு வந்த நிலையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. தற்போது முதலீட்டாளர்களின் கவனம் அனைத்தும் கச்சா எண்ணெய் மீது திரும்பியுள்ளதால் தங்கம் மீதான முதலீட்டு அளவுகள் குறைந்து அதன் விலை கணிசமாகக் குறைந்து தற்போது 10 கிராம் தங்கம் 40380 ரூபாயில் இருந்து 38,870 ரூபாய்க்குக் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications