டெல்லி: நேற்று மதியம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இந்தியாவில் இ சிகரெட் தடை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஒரு பக்கம் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்ட பின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு விடை கொடுத்துக் கொண்டு இருக்கும் போதே பயோகான் என்கிற இந்தியாவின் முன்னணி பார்மா நிறுவனத்தின் தலைவர் (இவரொரு சாதனைப் பெண்மணி) ட்விட்டரில் ஒரு கேள்வியைக் கேட்டு ட்விட்டரையே அதிர வைத்தார்.
இ சிகரெட்களுக்கு தடை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறார். இதை சுகாதாரத் துறை அமைச்சர் தானே சொல்லி இருக்க வேண்டும்..? என கிடுக்கிப் பிடி கேள்வி கேட்டிருந்தார்.
ட்ரோல்
அதோடு கிரண் மஜுந்தார் விட்டு இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் குட்கா போன்ற பொருட்களை எப்போது தடை செய்யப் போகிறீர்கள்..? இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த ஏதாவது அறிவிப்புகள் வெளியிட இருக்கிறீர்களா..? என தில்லாக மனதில் தோன்றியதைக் கேட்டு வறுத்து எடுத்திருக்கிறார் பயோகான் பார்மா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கிரண் மஜும்தார் ஷா. இப்படி கிரன் மஜும்தார் ஷா நேற்று ட்விட்டிய போது மணி மாலை 3.18. இந்த ட்விட்டை இப்போதுவரை 1400-க்கு மேற்பட்டவர்கள் ரீட்விட் செய்தும், 4,500-க்கு மேற்பட்டவர்கள் லைக் செய்திருக்கிறார்கள். கிரண் மஜுந்தாரின் கேள்விக்கு நிதி அமைச்சர் பதில் கொடுத்து இருக்கிறார்.
பதில் 1
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் ட்விட்டர் பக்கத்தில் கிரணின் கேள்விக்கு பதில் கொடுத்து இருக்கிறார். "கிரண் ஜிக்கு சில விஷயங்கள். நேற்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பு கேபினெட் தீர்மானங்களுக்காக கூட்டப்பட்டது. இ சிகரெட் தொடர்பான கொள்கை முடிவுகளில் அமைச்சர்கள் குழுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. அமைச்சர்கள் குழுவின் தலைவர் என்கிற முறையில் நான் பங்கேற்பதாக, பத்திரிகையாளர்கள் சந்திப்பின் தொடக்கத்திலேயே சொல்லி இருந்தேன். அதோடு சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஒரு கூட்டத்துக்காக வெளிநாடு சென்று இருக்கிறார்" என தன் முதல் பதிலைக் கொடுத்து இருக்கிறார்.
பதில் 2
"என் உடன் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் தகவல் & ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களும் இருந்தார். சுகாதார அமைச்சகத்தின் செயலர் இருந்தார். செயலர் எல்லாவற்றையும் விவரமாக விளக்கினார். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு, எப்படி நடக்க வேண்டும் என அரசு நடைமுறைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்" என தன் இரண்டாவது பதிலைக் கொடுத்து இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பதில் 3
"ஒரு நிதி அமைச்சராக, இந்தியப் பொருளாதாரம் குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக நான் பணியாற்றிக் கொண்டு இருப்பதையும், பேசுவதையும் நீங்கள் கவனித்து இருப்பீர்கள். இன்னும் இந்தியப் பொருளாதாரம் தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என தன்னுடைய மூன்றாவது பதிலைக் கிரண் மஜும்தாருக்கு சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தொழில் அதிபரின் கேள்விக்கு பதில் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் மேடம். அப்படியே கொஞ்சம் இந்தியப் பொருளாதாரத்தையும் கருணைப் பார்வை கொண்டு கவனித்தால் நன்றாக இருக்கும்.