டெல்லி : நலிந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்தாலும், அதற்கெல்லாம் செவி சாய்க்காத இந்திய பங்கு சந்தை, இன்று மொத்தத்தையும் சேர்த்து வைத்து ஒரே நாளில் செய்துவிட்டதாகவே தெரிகிறது.
அதிலும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் வாரிக் கொடுத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
இதுவரை பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இல்லாவிட்டாலும், இன்று ஒரே நாளில் மட்டும் கிட்டதட்ட 2000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது சென்செக்ஸ். இதே நிஃப்டி 569 புள்ளிகள் ஏற்றம் கண்டு முடிவடைந்தது.
இந்த நிலையிலேயே பி.எஸ்.இ சந்தையின் மூலதனம் 145.36 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த வியாழக்கிழமையன்று 138.54 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தனியார் புரோக்கிங் நிறுவனம் ஒன்று, வங்கித் துறை, எஃப்.எம்.சி.ஜி மற்றும் நுகர்வோர் பொருட்கள், ஆட்டோமொபைல் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள் இதனால் பெரும் பலனை அடையக்கூடும் என்றும் கூறியுள்ளது.
குறிப்பாக உற்பத்தி துறை சார்ந்த, புதிய நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் தான் கார்ப்பரேட் வரி என்பது, இனி வரும் புதிய நிறுவனங்களுக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்றும், அதிலும் குறிப்பாக உலக அளவில் பொருளாதார மந்தம் நிலவி வரும் இந்த நிலையில் இது பேருதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஏற்கனவே உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதம் 30 சதவிகிதத்திலிருந்து, தற்போது 22 சதவிகிதமாக குறைத்துள்ளார் நிதியமைச்சர். இது கூடுதல் கட்டணங்களோடு சேர்த்து கிட்டதட்ட 25 சதவிகிதமாகும்.
இந்த அதிரடி நடவடிக்கையால் அரசுக்கு ஆண்டுக்கு 1.45 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று கருதப்பட்டாலும், இந்த வரி குறைப்பால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மேலும் வளர்ச்சி அடையும் என்றும் கருதப்படுகிறது. இதன் மூலம் வர்த்தகம் பெருகும் என்றும், இதனால் மெதுவாக அரசுக்கு தொடர் வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் அன்னிய நிறுவனங்களோடு போட்டி போட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளதோடு, இது வரவேற்கதக்க ஒரு விஷயம் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.