டெல்லி: இந்தியாவின் முதல் தனியார் ரயிலில் பயணிக்க இன்று முதல் பயணச் சீட்டுகளை முன் பதிவு செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறது இந்திய ரயில்வேஸ்.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் அருமையான திட்டமிடல் மற்றும் தொலைநோக்கு பார்வையால் இந்திய ரயில்வே எனும் மிகப் பெரிய பொதுச் சொத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் வேலை தொடங்கியது.
இந்த தனியார்மயத்தின் முதல் அடையாளமாக டெல்லி முதல் லக்னெள வரை பயணிக்கும் தேஜாஸ் அதிவிரைவு ரயிலை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள்.
முதல் முறை
இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக சில தனியார் நிறுவன உதவி உடன், ஐ ஆர் சி டி சி மட்டுமே தனியாக இயக்க இருக்கும் முதல் ரயில் இது தானாம். டெல்லி முதல் லக்னெள வரைக்குமான பயண தூரத்தை 6 மணி நேரம் 15 நிமிடத்தில் கடக்குமாம். வாரத்தில் வியாழக்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இந்த ரயில் ஓடும். லக்னெள முதல் டெல்லி வரை செல்லும் தேஜாஸ் ரயிலில், சேர் கார் பிரிவில் ஒரு இருக்கைக்கான பயணக் கட்டணம் 1,125 ரூபாய். எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் பிரிவில் ஒரு இருக்கைக்கான பயணக் கட்டணம் 2,310 ரூபாயாம்.
விலை அதிகம்
டெல்லி முதல் லக்னெள வரை செல்லும் தேஜாஸ் ரயிலில், சேர் கார் பிரிவில் ஒரு இருக்கைக்கான பயணக் கட்டணம் 1,280 ரூபாய், எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் பிரிவில் ஒரு இருக்கைக்கான பயணக் கட்டணம் 2,450 ரூபாயாம். அதெப்படி..? லக்னெள முதல் டெல்லி வரைக்கும் வர ஒரு கட்டணம் என்றால் அதே கட்டணம் தானே டெல்லியில் இருந்து லக்னெள வருவதற்கும் ஆக வேண்டும்..? ஏன் மாறுபடுகிறது..? என்று கேட்டால் flexi-fare scheme என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.
ஆன்லைன் டிராவல் போர்டல்
இந்த தேஜாஸ் ரயில் பயணச் சீட்டை முன் பதிவு செய்ய, ஐ ஆர் சி டி சி வலைதளத்திலோ அல்லது ஐ ஆர் சி டி சி செல்ஃபோன் செயலி வழியாகவோ முன் பதிவு செய்து கொள்ள முடியும். ரயில் நிலைய கவுண்டர்களில் முன் பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக டெல்லி முதல் லக்னெள வரை செல்லும் தேஜாஸ் ரயிலின் பயணச் சீட்டுகளை பேடிஎம், போன்பே, மேக் மை ட்ரிப், ஐபிபோ, ரயில் யாத்ரி போன்ற ஆன்லைன் டிராவல் போர்டல்களிலும் முன் பதிவு செய்து கொள்ளலாம். பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பில் இருந்தே முன் பதிவு தொடங்குமாம்.
சலுகைகள் இல்லை
மூத்த குடிமக்களுக்கான விலைச் சலுகை, , ரயில்வே ஊழியர்களுக்கான பாஸை வைத்து பயணிப்பது, மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை என எந்த ஒரு ரயில்வே சலுகையும் இந்த தனியார் ரயிலில் செல்லுபடியாகாது. எல்லோரும் முழு கட்டணம் செலுத்தித் தான் பயணிக்க வேண்டுமாம். இதை விட கொடுமை என்ன தெரியுமா..? 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கூட முழு கட்டணம் தானாம். தற்போது நடைமுறையில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரயிலில் அரை டிக்கெட் தான் கொடுத்து வருகிறார்கள்.