இந்திய ஆட்டோமொபைல் துறையின் சரிவு, வீழ்ச்சி, வேலை இழப்புகள், டீலர்கள் கடையை சாத்திவிட்டு கிளம்புவது போன்ற செய்திகளை நாம் தொடர்ந்து படித்துக் கொண்டு இருக்கிறோம்.
சொல்லப் போனால் இந்த சிக்கல்களுக்கு மத்தியிலும் நாம் வாழத் தொடங்கிவிட்டோம்.
இந்த சிக்கல்களுக்கு எல்லாம் என்ன காரணம்..? ஏன் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்துக் கொண்டு இருக்கிறது போன்ற கேள்விகளுக்கு பத்திரிகையாளர்களுக்கு பதில் கொடுத்து இருக்கிறார் மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர் சி பார்கவா.
ஜிஎஸ்டி
பலரும் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைத்தால் சரியாகுமா எனக் கேட்டதற்கு... "ஜிஎஸ்டி வரி விகிதங்களால், இந்திய சந்தைகளில் தற்காலிகமாகத் தான் தீர்வு காண முடியுமே ஒழிய, நீண்ட காலத்துக்கு காண முடியாது" என நெற்றியில் அடித்தாற் போலச் சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் என்ன தான் தீர்வு எனக் கேட்டால் "இந்திய ஆட்டோமொபைல் துறையில் அடிப்படை மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்" எனச் சொல்லி இருக்கிறார்.
என்ன மாற்றங்கள்
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு, ஒரு நபரின் சராசரி வருமானம் சுமார் 2,2,00 டாலர். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் ஒரு ஆண்டுக்கு ஒரு நபரின் சராசரி வருமானம் சுமார் 40,000 டாலர்.
இந்தியாவில் ஐரோப்பிய நாடுகள் தரத்தில் பாதுகாப்பு வசதிகளுடன் கார்களைத் தயாரித்து இருக்கிறோம். அதனால் காரின் விலை முன்பை விட, பெரிய அளவில் அதிகரித்து இருக்கிறது.
காரின் விலை அதிகரித்த அளவுக்கு, இந்தியர்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. இந்த சூழலில் எப்படி இந்தியர்களால் காரை வாங்க முடியும் என அரசின் முகத்தில் அறைந்தார் போல கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இப்படியும் எடுத்துக் கொள்ளலாமா..?
மாருதி சுசூகி தலைவர் ஆர் சி பார்கவா சொன்னதை நாம் இப்படியும் பார்க்கலாமா என்று தோன்றுகிறது..!
1. அதாவது கார்களை ஐரோப்பிய தரத்தில் தயாரித்து விட்டோம். கார்களின் விலை கிட்டதட்ட ஐரோப்பிய நாடுகள் விலைக்குப் போய்விட்டது.
2. ஆனால் கார்களை வாங்க வேண்டிய இந்தியர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் அளவுக்கு வருமானம் உயரவில்லை. மாருதி சுசூகி தலைவர் சொல்வதில் ஒரு பெரிய அர்த்தம் இருக்கிறதே..!
மக்களிடம் பணம் இல்லை
அதே போல மோடியின் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றியும் கேட்டார்கள் பத்திரிகையாளர்கள். அதற்கு "5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்கிற இலக்கை அடைய, மத்திய அரசு உற்பத்தித் துறையின் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும். அதோடு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான தேவையும், அந்த பொருட்களை வாங்குவதற்கான சக்தி மக்களிடமும் இருக்க வேண்டும்" எனச் சொன்னார். தற்போது உற்பத்தி செய்யும் கார்களின் விலை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், மக்கள் வாங்க முடியாமல் ஒதுங்கும் நிலை இருப்பது போல, ஒரு சூழல் வந்தால் எப்படி பொருளை விற்று பொருளாதாரத்தை பெருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நிலை என்ன
ஏற்கனவே இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த ஒரு வருட காலமாக தொடர்ந்து சரிந்து கொண்டு இருக்கிறது. அசோக் லேலண்ட் எல்லாம் தன் பல உற்பத்தி ஆலைகளில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 10 - 20 நாட்களை வேலை இல்லா நாட்களாக அறிவித்து இருக்கிறார்கள். இந்திய ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றிக் கொண்டு இருந்த சுமார் 3.5 லட்சம் பேரை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
பயம்
இன்னும் எத்தனை பேரை இந்த சரிவு பலி கேட்கப் போகிறது எனத் தெரியவில்லை. அரசு இந்த பாதாளச் சரிவை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும் தெரியவில்லை. மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர் சி பார்கவா அவர்களின் கேள்விக்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்றும் தெரியவில்லை. நாட்டின் மிகப் பெரிய கார் நிறுவனத்தின் தலைவரின் கேள்விக்கே இன்னும் பதில் இல்லை என்றால் நாம் எல்லாம் எம்மாத்திரம்..?