டெல்லி: இந்தியாவின் மறைமுக வரிகள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்டு, ஜிஎஸ்டி என்கிற பெயரில் கொண்டு வரப்பட்டு இருப்பதை நாம் அறிவோம்.
ஜிஎஸ்டி வரி விகிதங்களை அதிகரிப்பது, குறைப்பது, கூடுதலாக வரி விதித்துக் கொள்ள அனுமதி வழங்குவது எல்லாமே சர்வ அதிகாரம் பொருந்திய ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு செய்யும்.
நேற்று (20 செப்டம்பர் 2019) நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரியைக் குறைத்து இருக்கிறார்கள். சில சேவைகளுக்கு வரம்பை குறைத்திருக்கிறார்கள்.
எதிர்பார்ப்பு
இதனால் சிறு குறு வியாபாரிகள் ஜிஎஸ்டி விதிமுறைகளை கடை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அதோடு இந்தியாவின் ஏற்றுமதி சார் வியாபாரங்கள் வளர்ந்து, பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என எதிர்பார்க்கிறது அரசு. இந்தியாவில் சிறப்பாக அமைப்பு வட்டத்துக்குள் இயங்கும் ஆட்டோமொபைல் மற்றும் பிஸ்கெட் தொழில்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கவில்லை. மாறாக ஹோட்டல்களுக்கு ஜிஎஸ்டி வரிகளை மாற்றி இருக்கிறார்கள்.
ஹோட்டல் புதிய ஜிஎஸ்டி
தற்போது இந்தியாவில் இருக்கும் தங்கும் விடுதிகளில் (Hotel)
நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய்க்குள் வாடகை வசூலிக்கிறார்கள் என்றால் - 0% ஜிஎஸ்டி,
நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய் முதல் 7,500 ரூபாய்க்குள் வாடகை வசூலிக்கிறார்கள் என்றால் - 12% ஜிஎஸ்டி
நாள் ஒன்றுக்கு 7,500 ரூபாய்க்கு மேல் வாடகை வசூலிக்கிறார்கள் என்றால் - 18% ஜிஎஸ்டி... என மாற்றி அமைத்து இருக்கிறார்கள்.
ஹோட்டல் பழைய ஜிஎஸ்டி
இந்த 37-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்,
நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய்க்குள் வாடகை - 0% ஜிஎஸ்டி
நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய் முதல் 2,500 ரூபாய்க்குள் வாடகை - 12% ஜிஎஸ்டி
நாள் ஒன்றுக்கு 2,500 ரூபாய் முதல் 7,500 ரூபாய்க்குள் வாடகை - 18% ஜிஎஸ்டி
நாள் ஒன்றுக்கு 7,500 ரூபாய்க்கு மேல் வாடகை - 28% ஜிஎஸ்டி... என இருந்தது குறிப்பிடத்தக்கது.
கேட்டரிங் மற்றும் குளிர்பானம்
அவுட் டோர் கேட்டரிங்கள் இது நாள் வரை 18 % ஜிஎஸ்டி (Input Tax credit உடன்) செலுத்தி வந்தார்கள். இனி 5 % (Input Tax credit உடன்) மட்டும் செலுத்தினால் போதும் எனச் சொல்லி இருக்கிறர்கள். இந்த புதிய வரி மாற்றங்கள் எல்லாமே வரும் அக்டோபர் 01, 209 முதல் அமலுக்கு வருகிறதாம். caffeinated குளிர்பானங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18-ல் இருந்து 28 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
சலுகை
மிக முக்கியமாக ஜிஎஸ்டியில் பதிவு செய்து கொண்ட வியாபாரிகள் அனைவரும் ஆண்டு இறுதியில் ஜிஎஸ்டிஆர் 9 படிவத்தை சமர்பிக்க வேண்டும். தற்போது 37-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட முடிவுக்குப் பின், ஜிஎஸ்டிஆர் 9 படிவத்தை, ஆண்டு ஜிஎஸ்டி டேர்ன் ஓவர் 2 கோடி ரூபாய்க்குக் கீழ் இருந்தால், கட்டாயம் சமர்பிக்க வேண்டியதில்லை. விரும்புபவர்கள் சமர்பிக்கலாம். சமர்பிக்க முடியாதவர்கள் சமர்பிக்கத் தேவை இல்லை என சலுகை கொடுத்து இருக்கிறார்கள். இது கடந்த 2017 - 18 மற்றும் 2018 - 19 நிதி ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.