டெல்லி : பொதுத்துறையை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு, கடந்த ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனமான இது, மிகப்பெரிய கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்தது.
குறிப்பாக இந்த நிறுவனத்தின் 1.7 லட்சம் பணியாளர்களுக்கு ஊதியம் தருவதற்கு கூட நிதி திரட்ட முடியாமல் பி.எஸ்.என்.எல் திண்டாடி வந்தது. இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் தனது ஊழியர்களுக்கு சரியான படி, சரியான நேரத்தில் ஊதியத்தை கொடுக்க முடியாமல் தவித்து வந்தது. இந்த நிலையிலேயே கடந்த ஆகஸ்ட் மாத ஊதியத்தினை ஊழியர்களுக்கு கொடுத்துவிட்டதாக ஊழியர்கள் வட்டாரத்தில் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் இயக்குனர் பிகே புர்வாரும் இதை உறுதி செய்துள்ளார். கடந்த வாரமே ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளத்தை கொடுத்துவிட்டதாகாவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ வருகைக்கு பின்னர் இந்த நிறுவனம், நிறுவனத்துக்குள்ளும், வெளியிலும் உள்ள சவால்கள் காரணமாக, பி.எஸ்.என்.எல். கடுமையான நிதித் பிரச்சனையில் சிக்கி தவித்து வந்தன.
அதிலும் தனியார் நிறுவனங்கள் கூட 4ஜி சேவையை அளித்து வரும் நிலையில், பொதுத்துறை நிறுவனத்தில் அப்படி சலுகை இல்லாதது இதற்கு பெரிதும் இழப்பு ஏற்பட்டதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இதனால் தொடர்ந்து வருவாயை இழந்து, கடன் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் சில இடங்களில் செயல்பாட்டு மூலதனம் மற்றும் நில வாடகை கூட கொடுக்க முடியாமல் தனது சேவையை முடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதிலும் சில இடங்களில் மின் கட்டணம் கூட செலுத்த முடியாமல் தவித்து வந்தது இந்த நிறுவனம்.
இந்த நிலையில் இந்த நிறுவனம் கூடுதல் செலவுகளை குறைக்க ஊழியர்களுக்கு, தன்னார்வா ஓய்வூதிய திட்டத்தினை கூறியது. இதன் மூலம் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஓய்வு பெறுவார்கள் என்றும், இதன் மூலம் மீதமிருக்கும் வாடிக்கையாளர்களை வைத்து வேலை செய்யலாம் என்றும், மேலும் இன்றளவில் பல கிராமப்புறங்களில் உள்ள இணைப்பகங்களில் வரவுக்கு மேல் செலவினங்கள் அதிகரித்திருப்பதால், அவற்றை மூடினால் செலவு மேலும் மிச்சமடையும், என்றும் இதனை வைத்து வளர்ச்சியுள்ள இடங்களில் இன்னும் வளர்ச்சியினை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கு இன்றைய நிலையில் 14,000 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் இந்த நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.