கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் சவுதி அரேபியா. அந்நாட்டு எல்லை பகுதியில் இருக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீவிரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் இரு முக்கிய உற்பத்தி ஆலைகள் பாதிக்கப்பட்டு உற்பத்தி தடை பெற்றது.
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு
சவுதியின் உற்பத்தி பாதிக்கப்பட்டால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தத் தட்டுப்பாட்டின் வாயிலாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும். இதே விஷயங்கள் தான் தற்போது இந்தியாவிலும் நடந்துள்ளது.
4 வாரங்கள்
தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர்கொண்ட சவுதி கச்சா எண்ணெய் உற்பத்தியை 4 வாரங்களுக்குள் திரும்பவும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு அதற்கான பணிகளையும் செய்து வருவதாகத் தெரிவித்தது. ஆனாலும் சந்தையில் ஏற்பட்டு உள்ள தட்டுப்பாடு தவிர்க்க முடியவில்லை.
அதிலும் குறிப்பாகச் சவுதி அரேபியா இந்தியாவிற்குக் கிடைக்க வேண்டிய கச்சா எண்ணெய் அளவில் எவ்விதமான குறைபாடும் இன்றிக் கிடைக்கும் எனத் தெரிவித்தது.
இந்தியா
இப்படிப் பல விஷயங்கள் இந்தியாவிற்குச் சாதகமாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றத்தின் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் விலை கடந்த ஒரு வாரத்தில் 2 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
பிரச்சனை என்னவோ சவுதியில் தான், ஆனால் இதனால் பாதிக்கப்படுவது இந்திய மக்கள். தற்போது தினசரி விலை மாற்றம் செய்யப்படுவதால் மத்திய அரசு எவ்விதமான தலையீடும் இல்லாமல் விலை உயரும் போது மட்டும் இந்தியாவிலும் அந்த விலையை அப்படியே உயர்த்துகிறது. ஆனால் விலை குறையும்போது சில பைசாவை மட்டும் குறைத்து பெட்ரோல், டீசல் விற்பனையில் அதிக வரி வருவாயை பார்த்து வருகிறது.
சென்னை
சென்னையில் கடந்த வாரம் 17ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 74.99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 77.06 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிட்டதட்ட ஒரு வார காலத்தில் 2 ரூபாய் விலை உயர்வு அடைந்துள்ளது.
இதேபோல் டீசல் விலை 69.31 ரூபாயில் இருந்து 70.91 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது 1.60 பைசா வரையிலான விலை உயர்வை பதிவு செய்துள்ளது.
சாமானிய மக்கள்
இந்த 2 ரூபாய் விலை உயர்வு சாமானிய மக்களைப் பெரிய அளவில் பாதிக்கிறது. தினசரி போக்குவரத்து, காய்கறி, மளிகை பொருட்கள் முதல் அனைத்து தினசரி தேவைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றத்தில் மத்திய சில பகுதியை மட்டுமே ஏற்றுக்கொண்டு வருகிறது. இதை அதிகமாக ஏற்றுக்கொள்வதன் மூலம் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.